குலதெய்வ கோயிலில் பலாப்பழத்தை வைத்து வழிபட்ட பன்னீர்செல்வம்
குலதெய்வ கோயிலில் பலாப்பழத்தை வைத்து வழிபட்ட பன்னீர்செல்வம்
குலதெய்வ கோயிலில் பலாப்பழத்தை வைத்து வழிபட்ட பன்னீர்செல்வம்
ADDED : ஜூன் 02, 2024 11:35 PM

ஸ்ரீவில்லிபுத்துார் : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத்தோப்பில் உள்ள தனது குலதெய்வமான பேச்சியம்மன் அம்மன் கோயிலில் முன்னாள் முதல்வரும், ராமநாதபுரம் லோக்சபா தொகுதி வேட்பாளருமான பன்னீர்செல்வம், தனது தேர்தல் சின்னமான பலாப்பழத்தை வைத்து தேர்தலில் வெற்றி பெற வேண்டி சிறப்பு வழிபாடு செய்தார்.
நேற்று காலை 7:30 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுக்கு வந்த பன்னீர்செல்வத்தை அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர்.
கோயிலில் கொடி மரத்தை வணங்கி ஆண்டாள் சன்னதியில் தரிசனம் செய்துவிட்டு பிரகாரம் சுற்றி வந்தார். பின்னர் வடபத்திர சயனர் கோயிலில் ஆண்டாள் நந்தவனம், சக்கரத்தாழ்வார், பெரிய பெருமாள் சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் தனது குலதெய்வமான செண்பகத் தோப்பு பேச்சியம்மன் கோயிலுக்கு வந்தார். அங்கு அம்மன் காலடியில் பலாப்பழத்தை வைத்து வழிபட்டார்.
பின்னர் கும்பாபிஷேகம் நடந்த வைத்தியநாத சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார்.
''நான் மத்திய அமைச்சராவது கடவுள் கையில்தான் உள்ளது'' என மதுரையில் நேற்று மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தபின் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
லோக்சபா தேர்தல் நாட்டை யார் ஆள வேண்டும் என்பதற்காக நடந்துள்ளது. பா.ஜ., பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று மோடி மீண்டும் பிரதமராக வருவார். நான் பலனை எதிர்பார்த்து கட்சிப்பணி செய்பவன் அல்ல. ராமநாதபுரத்தில் என்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
நான் மத்திய அமைச்சராவது கடவுள் கையில்தான் உள்ளது. அரசு செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டும் இயக்கமாக அ.தி.மு.க., உரிமை மீட்புக் குழு செயல்பட்டு வருகிறது.
யாரால் அ.தி.மு.க., சின்னாபின்னமாக்கப்பட்டது என அனைவருக்கும் தெரியும். அது தேர்தல் முடிவில் எதிரொலிக்கும் என்றார்.