Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு மீண்டும் பணி வழங்க எதிர்ப்பு

ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு மீண்டும் பணி வழங்க எதிர்ப்பு

ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு மீண்டும் பணி வழங்க எதிர்ப்பு

ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு மீண்டும் பணி வழங்க எதிர்ப்பு

ADDED : ஜூன் 01, 2024 08:47 PM


Google News
சென்னை:தமிழகத்தில் மூன்று மருத்துவமனை முதல்வர்கள் உட்பட, 36 பேர் ஓய்வு பெற்ற நிலையில், அதில், சிலருக்கு மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்க, அரசு நடவடிக்கை எடுத்து வருவதற்கு, ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனை இயக்குனர் பார்த்தசாரதி, கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முதல்வர் உஷா, ஈரோடு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி மற்றும் 33 பேராசிரியர்கள் என, 36 பேர் நேற்று முன்தினம் ஓய்வு பெற்றனர்.

இதில், கிண்டி பல்நோக்கு மருத்துவமனை இயக்குனராக இருந்த பார்த்தசாரதிக்கு, ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் அப்பதவி வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு, ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து, அச்சங்கத்தின் தலைவர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:

அரசு மருத்துவ கல்லுாரிகளில் பணியாற்றும், 600க்கும் மேற்பட்டோர் பதவி உயர்வு பெற்று காத்திருக்கின்றனர். அவர்களை விட்டு விட்டு, பணி ஓய்வு பெற்றவர்களை மீண்டும் உயர் பதவிகளில் அமர வைப்பது ஏற்புடையதாக இல்லை.

ஓமந்துாரார் அரசு மருத்துவமனை இயக்குனர் விமலாவும், ஒப்பந்த அடிப்படையில் தான் நியமிக்கப்பட்டு உள்ளார்.

அதேபோல, கிண்டி பல்நோக்கு மருத்துவமனை இயக்குனராக, பார்த்தசாரதியை நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஓய்வு பெறும் அதிகாரிகளை தங்கள் ஆதாயத்திற்காக அரசு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்வதால், அடுத்து பதவி உயர்வுக்காக காத்திருப்போர் பாதிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us