மொட்டை மாடி ஆக்கிரமிப்பு சரத்குமாருக்கு 'நோட்டீஸ்'
மொட்டை மாடி ஆக்கிரமிப்பு சரத்குமாருக்கு 'நோட்டீஸ்'
மொட்டை மாடி ஆக்கிரமிப்பு சரத்குமாருக்கு 'நோட்டீஸ்'
ADDED : ஜூன் 05, 2024 11:51 PM
சென்னை:சென்னை தி.நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், சட்டவிரோதமாக பொது பயன்பாட்டு இடத்தை, ஆக்கிரமிப்பு செய்ததாக, நடிகர் தனுஷின் தாய் தொடர்ந்த வழக்கில், சென்னை மாநகராட்சியும், நடிகர் சரத்குமாரும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தி.நகர் ராஜமன்னார் தெருவில் உள்ள 'கோல்டன் அபார்ட்மென்டில் தரை தளத்துடன் கூடிய இரண்டு அடுக்குமாடி குடியிருப்பில், நடிகர் தனுஷ் தாய் விஜயலட்சுமி, திருநாவுக்கரசு, நுஷ்ரத் அபிதா உள்ளிட்டோர் வசிக்கின்றனர்.
இவர்கள் மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
நாங்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ஒவ்வொரு தளத்துக்கு இரண்டு வீடுகள் என ஆறு வீடுகள் உள்ளன.
பொது பயன்பாட்டு இடமான மொட்டை மாடியை மற்ற வீடுகளில் வசிப்போர் பயன்படுத்துவதை, தெய்வசிகாமணி என்பவர் தடுக்கிறார். அவருடன், தரைத்தளத்தில் உள்ள நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர், சட்ட விரோதமாக பொது பயன்பாட்டு இடத்தை ஆக்கிரமித்து, கட்டடம் கட்டி, வணிக ரீதியாக பயன்படுத்துகிறார்.
இந்த 36 ஆண்டு பழமையான கட்டடத்தில் மாநகராட்சி அனுமதியின்றி, சட்டவிரோத கட்டுமானம் எழுப்பியுள்ளனர். சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. எனவே, சட்டவிரோத கட்டுமானத்தை இடிக்க மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, சென்னை மாநகராட்சி மற்றும் நடிகர் சரத்குமார் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
மனுதாரர்கள் தரப்பில், வழக்கறிஞர் காஜா மொய்தீன் கிஸ்தி ஆஜரானார்.