நீதிபதி சுவாமிநாதன் கருத்து சட்டப்படி சரியானதல்ல; 3வது நீதிபதி தீர்ப்பு
நீதிபதி சுவாமிநாதன் கருத்து சட்டப்படி சரியானதல்ல; 3வது நீதிபதி தீர்ப்பு
நீதிபதி சுவாமிநாதன் கருத்து சட்டப்படி சரியானதல்ல; 3வது நீதிபதி தீர்ப்பு
ADDED : ஜூன் 11, 2024 04:19 AM

சென்னை : 'பதில் அளிக்க சந்தர்ப்பம் வழங்காமல், இயற்கை நீதியை மீறும் வகையில், நீதிபதி சுவாமிநாதன் எடுத்த முடிவு, புறக்கணிக்கப்படக் கூடியது; அது, சட்டப்படி இல்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, அவரது தாய் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு, விடுமுறை கால நீதிமன்றத்தில், நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி.பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மாறுபட்ட தீர்ப்பு
குண்டர் சட்டத்தில் கைது செய்ததை, ரத்து செய்து நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டார். அரசு தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்ய அனுமதிக்கவும், அதன்பின், வழக்கை இறுதியாக விசாரிக்க வேண்டும் என்றும், நீதிபதி பாலாஜி உத்தரவிட்டார்.
இறுதி முடிவு ஏற்படாததால், இந்த வழக்கை விசாரிக்க, மூன்றாவது நீதிபதியாக ஜி.ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டார். இவ்வழக்கில், நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு:
இருக்கிற ஆவணங்களை வைத்து, தகுதி அடிப்படையில், ஒரு நீதிபதி முடிவு செய்துள்ளார்; மற்றொரு நீதிபதியோ உத்தரவு பிறப்பிப்பதற்கு முன், பதில் மனுத்தாக்கல் செய்ய, அரசை அனுமதிக்க வேண்டும் என்று கருதியுள்ளார்.
ஒரு நீதிபதி ஆவணங்களின் அடிப்படையில், தன் முடிவை தெரிவித்துள்ளார்; மற்றொரு நீதிபதியோ, வழக்கின் தகுதி பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.
அதனால், மூன்றாவது நீதிபதி முடிவு செய்ய, இங்கு இரண்டு மாறுபட்ட கருத்து இல்லை. 'ரிட்' வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டு, நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு விட்டால், குண்டர் சட்டத்தில் கைது உத்தரவு பிறப்பித்த அதிகாரிக்கு விளக்கம் அளிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.
அதிகாரியின் உத்தரவை சோதிக்கும் போது, இயற்கை நீதிப்படி அவர் தரப்பை கேட்க வேண்டும். அது, எழுத்துப்பூர்வமாக அல்லது வாய்மொழியாக இருக்க வேண்டும்.
பதில் மனுத்தாக்கல் செய்ய, நான்கு வாரங்கள் அல்லது அதற்கு குறைவாக அவகாசம் அளிக்கலாம். ஆனால், கைது உத்தரவு பிறப்பித்ததில் அதிகார துஷ்பிரயோகம் தெரிந்தால், நான்கு வாரம் முடியும் வரை நீதிமன்றம் காத்திருக்க தேவையில்லை. விரைந்து பதில் அளிக்கும்படி, அரசுக்கு உத்தரவிட நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. அந்த பதில், எழுத்துப்பூர்வமாக தான் இருக்க வேண்டும் என்ற தேவையும் இல்லை. ஆனால், அதிகாரிக்கு பதில் அளிக்க, உரிய சந்தர்ப்பம் அளிக்க வேண்டும்.
இந்த வழக்கில், அத்தகைய சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை. அதனால், ஒரு நீதிபதி தெரிவித்த கருத்து, முழுமையாக மனதை செலுத்தாதது போல் தான் உள்ளது.
புறக்கணிக்கலாம்
விளக்கம் அளிக்க சந்தர்ப்பம் வழங்காமல், நீதிபதி தெரிவித்த முடிவு, தீர்ப்பின் வடிவத்தை இழந்து விட்டது. அமர்வில் இருக்கும் நீதிபதிகள், சட்டப்படி வழக்கின் தன்மை அடிப்படையில் முடிவாக தீர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்பதால், மூத்த நீதிபதி பதிவு செய்துள்ள கருத்து சட்டப்படி இல்லை.
ஒரு நீதிபதியின் உத்தரவில் முடிவு இல்லை எனும் போது, இயற்கை நீதியை மீறி, சட்டநடைமுறையை பின்பற்றாமல், மற்றொரு நீதிபதி எடுத்த முடிவை புறக்கணித்து விடலாம்.
எனவே, இரு நீதிபதிகள் அமர்வில், ஆவணங்கள் அடிப்படையில் ஒரு நீதிபதி தீர்ப்பு வழங்கி, பதில் அளித்த பின் முடிவு செய்யலாம் என்று மற்றொரு நீதிபதி முடிவு எடுக்கும் போது, அதை மாறுபட்ட உத்தரவாக கருத முடியாது. ஒரு நீதிபதியின் ஒருதலைபட்சமான முடிவை, மற்றொரு நீதிபதி ஏற்கவில்லை என்றே கருதுகிறேன்.
பதில் மனுத்தாக்கல் செய்ய சந்தர்ப்பம் வழங்க தவறியது; சக நீதிபதியிடம் ஆலோசிக்காமல் அவசரமாக உத்தரவு பிறப்பிப்பதில் ஆர்வம் காட்டியதால், நீதிபதி சுவாமிநாதன் தெரிவித்த கருத்து சட்டப்படியாக இல்லை.
பதில் மனுத்தாக்கல் செய்ய சந்தர்ப்பம் வழங்காமல் உத்தரவு பிறப்பித்ததற்கு, நீதிபதி விளக்கம் அளித்துள்ளார். இரண்டு துாதர்கள் தன்னை அணுகியதாகவும், கடுமையான குற்றச்சாட்டையும் நீதிபதி கூறியுள்ளார்.
அரிதாக இதுபோன்ற நிகழ்வு, நீதிபதிக்கு ஏற்படும். அப்படி ஒரு நிகழ்வு நடந்தாலும், கடந்த காலங்களில், தலைமை நீதிபதிக்கு புகார் அளிப்பர் அல்லது நீதி நிர்வாகத்தில் குறுக்கிடுவதற்காக, நடவடிக்கை எடுப்பர் அல்லது வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகுவர்.
ஆட்கொணர்வு வழக்குகளை பைசல் செய்வதில் தாமதம் ஏற்படுவது குறித்து, நீதிபதி சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண, கூடுதல் அமர்வுகளை ஏற்படுத்தி, குறிப்பிட்ட அவகாசத்துக்குள் விசாரணையை முடிக்க வேண்டும்.
நீக்கப்பட வேண்டும்
ஆட்கொணர்வு வழக்குகளின் பெருக்கத்தை கருதி, மனுத் தாக்கல் செய்து மூன்று மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க, உயர் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, நீதிபதி சுவாமிநாதன் தெரிவித்த கருத்து நீக்கப்பட வேண்டியது. அரசு தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு விட்டது.
இரு தரப்பிலும், ஆட்கொணர்வு வழக்குகளை விசாரிக்கும் அமர்வில், புதிதாக விசாரணை நடத்த ஒப்புக் கொண்டுள்ளனர். வரும் 12ம் தேதி, ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு பட்டியலிட பதிவுத் துறைக்கு உத்தரவிடப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.