சிதம்பரம் கோவிலில் கனகசபை மீது நின்று தரிசனம் செய்ய தடையில்லை
சிதம்பரம் கோவிலில் கனகசபை மீது நின்று தரிசனம் செய்ய தடையில்லை
சிதம்பரம் கோவிலில் கனகசபை மீது நின்று தரிசனம் செய்ய தடையில்லை
ADDED : ஜூலை 10, 2024 01:34 AM
சென்னை:சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆனி திருமஞ்சனம் விழாவின் போது, கனகசபை மீது நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிப்போர் மீது, அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கலாம் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரத்தை சேர்ந்த சம்பந்தமூர்த்தி ராமநாதன் என்பவர் தாக்கல் செய்த மனு:
சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆனி திருமஞ்சன விழா துவங்கி நடந்து வருகிறது. ஆண்டுதோறும் ஆனி திருமஞ்சனம் மற்றும் மார்கழி திருவாதிரை விழாவின் போது, ஆறு அபிஷேகங்கள் சுவாமி நடராஜருக்கு நடக்கும்.
ஆனி திருமஞ்சன விழாவை காண, உலகம் முழுதும் உள்ள பக்தர்கள் வருகை தருவர். விழாவின் போது பக்தர்கள் கனகசபை மீது நின்று, சாமி தரிசனம் செய்ய தீட்சிதர்கள் தடை விதிக்கின்றனர்.
கடந்த 2022ல், கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, பக்தர்கள் இன்று முதல் நான்கு நாட்களுக்கு, கனகசபை மீது நின்று தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும்.
தீட்சிதர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் எந்த விதத்திலும் தடை விதிக்கக்கூடாது என, உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது சபீக் அடங்கிய, முதல் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், அறநிலையத்துறை சார்பில் சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகினர்.
தொடர்ந்து, 'கனகசபை மீது நின்று தரிசனம் செய்ய அனுமதித்த அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில், எந்த தடை உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை' என, தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, 'கனகசபை மீது நின்று சாமி தரிசனம் செய்யும் அரசாணைக்கு எதிராக, எந்த தடையும் விதிக்கப்படவில்லை. எனவே, சட்டத்தை கையில் எடுப்பவர்களுக்கு எதிராக, அறநிலையத்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.
'இவ்விவகாரம் தொடர்பாக அதிகாரிகளுக்கு, மனுதாரர் விண்ணப்பம் அளிக்கலாம். அடுத்த வாரம், இதுதொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்' என, உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.