Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ குஜராத் ஐ.ஏ.எஸ்., அதிகாரி மனைவி சூர்யா தற்கொலை

குஜராத் ஐ.ஏ.எஸ்., அதிகாரி மனைவி சூர்யா தற்கொலை

குஜராத் ஐ.ஏ.எஸ்., அதிகாரி மனைவி சூர்யா தற்கொலை

குஜராத் ஐ.ஏ.எஸ்., அதிகாரி மனைவி சூர்யா தற்கொலை

ADDED : ஜூலை 22, 2024 04:37 AM


Google News
Latest Tamil News
மதுரை: மதுரையில் ரூ.2 கோடி கேட்டு பள்ளி மாணவரை கடத்திய வழக்கில் தொடர்புடைய குஜராத் ஐ.ஏ.எஸ்., அதிகாரி மனைவி சூர்யா, அகமதாபாத் கலெக்டர் அலுவலக குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாயார் உமா தெரிவித்தார்.

மதுரை எஸ்.எஸ்.காலனி மைதிலி ராஜலட்சுமி. பத்தாம் வகுப்பு படிக்கும் இவரது 14 வயது மகனை சில நாட்களுக்கு முன் கூலிப்படையினர் துப்பாக்கி முனையில் கடத்தி ரூ.2 கோடி கேட்டு மிரட்டினர்.

இதுதொடர்பாக 'டிஸ்மிஸ்' போலீஸ்காரர் தேனி மாவட்டம் போடியை சேர்ந்த செந்தில்குமார் 39, நெல்லை ரவுடி அப்துல்காதர் 42, தென்காசி மாவட்டம் சிவகிரி வைரமணி 36, காளிராஜன் 25, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வழக்கில் துாத்துக்குடி 'ஐகோர்ட்' மகாராஜா, விளாத்திகுளம் சூர்யா ஆகியோருக்கும் தொடர்பு இருந்ததும் தெரியவந்தது. சூர்யா, குஜராத் மாநில ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் மனைவி ஆவார்.

கடத்தல் பின்னணி


கடத்தல் பின்னணி குறித்து போலீசார் கூறுகையில் 'மைதிலி ராஜலட்சுமிக்கும், சூர்யாவுக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் ரூ.2 கோடி வட்டிக்கு கடன் வாங்கிய சூர்யா, அதை செலுத்த முடியாமல் அவரது மதுரை சொத்துக்களை மைதிலி ராஜலட்சுமிக்கு ஈடாக எழுதிக்கொடுத்துள்ளார்.

பணமும், சொத்தும் இல்லாத நிலையில் மைதிலி ராஜலட்சுமியின் மகனை கடத்தி ரூ.2 கோடி பறிக்க சூர்யா திட்டமிட்டு இருந்ததாகவும் அதற்காக துாத்துக்குடி மகாராஜா, போடி செந்தில்குமார் உள்ளிட்ட கூலிப்படையினரை அவர் அணுகியதும் தெரியவந்தது' என்றனர்.

இதையடுத்து வெளிமாநிலத்தில் பதுங்கியிருந்த மகாராஜா, சூர்யாவை கைது செய்ய மதுரை தனிப்படை போலீசார் தீவிரம் காட்டினர்.

குஜராத்தில் சூர்யா தற்கொலை


இந்நிலையில் நேற்று காலை குஜராத் அகமதாபாத் கலெக்டர் குடியிருப்பில் சூர்யா தற்கொலை செய்து கொண்டதாக அங்கிருந்து தனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது எனக் கூறி, மதுரை போடிலைனைச் சேர்ந்த சூர்யாவின் தாய் உமா, மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்க வந்தார்.

பொய் புகார் கூறிஅசிங்கப்படுத்திட்டாங்க


உமா கூறியதாவது:

மதுரையில் சூர்யா தொழில் துவங்க முயற்சித்தார். அதற்காக தந்தை பாலுவிடம் சில சொத்துக்களை நன்கொடையாக எழுதிப் பெற்றார். அதன் மூலம் மைதிலி ராஜலட்சுமியின் கடனை கொடுத்தார். அதன்பிறகும் சூர்யாவை மைதிலி ராஜலட்சுமி 'டார்ச்சர்' செய்துள்ளார்.

அதன்பின் அவர் எங்கே இருக்கிறார் எனத் தெரியவில்லை. படித்தவர் தானே எங்கு போனாலும் வந்து விடுவார் என இருந்தேன்.

ஆனால் நேற்று காலை குஜராத் அகமதாபாத் கலெக்டர் ரஞ்சித்குமார் பங்களாவில் இருந்து 'உங்கள் மகள் தற்கொலை செய்து கொண்டார்' என தெரிவித்தனர். அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் இருந்தும் ஹிந்தியில் பேசினர். எனக்கு புரியவில்லை. 'கலெக்டர் மனைவியை போலீஸ் தேடுகிறது. கடன் வாங்கிய அவர் முன்னே பின்னே கொடுக்கலாம். அவரை கேவலப்படுத்தி விட்டாங்களே' என மனமுடைந்து விட்டாளோ. அவருக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ளனர்.

சூர்யாவின் ஐ.ஏ.எஸ்., கணவர் அலைபேசியை எடுக்க மறுக்கிறார். நான் எப்படி குஜராத் செல்வேன் எனத் தெரியவில்லை. சூர்யா தற்கொலைக்கு மைதிலி ராஜலட்சுமிதான் காரணம். அவர் மீது புகார் கொடுக்க வந்தேன் என்றார்.

சதிவேலை என தாய் புகார்


இதையடுத்து மதுரை எஸ்.எஸ்.,காலனி போலீசில் உமா புகார் அளித்தார். அதன் விபரம்: என் மகள் சூர்யா மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துள்ளார். இதற்கு மைதிலி ராஜலட்சுமி, கிேஷார் ஆகியோர் இணைந்து என் மகள் உடைமைகளையும், பணம், சொத்துக்களையும் மோசடி செய்ததும் இல்லாமல் ஆளைக் கடத்தி விட்டார் என பொய் புகார் அளித்து அவரை அசிங்கப்படுத்திவிட்டனர்.

இதனால் மனஉளைச்சலில் இருந்த அவர் குஜராத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு மைதிலி ராஜலட்சுமி, கிேஷாரின் சதி வேலையே காரணம். பொய் புகார் அளித்த இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us