ADDED : ஜூலை 03, 2024 05:41 AM

கண்டாச்சிபுரம், : மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய மின் வாரிய ஊழியரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த கீழ்வாலை கிராமத்தை சேர்ந்தவர் முருகதாஸ், 40; மரப்பட்டறை உரிமையாளர். இவர், மின் இணைப்பு பெற பல மாதங்களுக்கு முன் பணம் செலுத்தியும், இணைப்பு வழங்கவில்லை.
இதுகுறித்து, அப்பகுதி லைன்மேன் பலராமன்,53; என்பவரிடம் கேட்டதற்கு மின் இணைப்பு வழங்க ரூ.3,500 லஞ்சம் கேட்டார்.
அதில் விருப்பம் இல்லாத முருகதாஸ், விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
லஞ்ச ஒழப்பு போலீசார் அறிவுறுத்தல்படி முருகதாஸ் நேற்று மாலை 5:00 மணிக்கு லைன்மேன் பலராமனை தனது மரப்பட்டறைக்கு அழைத்து அவரிடம் ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்தார்.
அதனை பலராமன் வாங்கியபோது, அங்கு பதுங்கியிருந்த டி.எஸ்.பி., சத்தியராஜ், இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி ஆகியோர் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், பலராமனை கையும் களவுமாக பிடித்து, கண்டாச்சிபுரம் மின்வாரிய அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்தனர்.