சுத்திகரிப்புக்கு சோலார் மானியம் சாய ஆலை உரிமையாளர்கள் மனு
சுத்திகரிப்புக்கு சோலார் மானியம் சாய ஆலை உரிமையாளர்கள் மனு
சுத்திகரிப்புக்கு சோலார் மானியம் சாய ஆலை உரிமையாளர்கள் மனு
ADDED : ஜூன் 15, 2024 09:35 PM

திருப்பூர்:சோலார் மானியம் வழங்கி உதவ வேண்டு மென, ஐக்கிய நாடுகள் தொழில் வளர்ச்சி அமைப்பிடம், திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், ஐக்கிய நாடுகளின் தொழில் வளர்ச்சி அமைப்பு மற்றும் உலகளாவிய சுற்றுச்சூழல் மேம்பாட்டு அமைப்பு ஆகிய வற்றுடன் இணைந்து, ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தியில், அபாயகரமான ரசாயனங்களை நீக்குதல் தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் தொழில் வளர்ச்சி அமைப்பு, ஜூன் 14ல் டில்லியில் கலந்தாய்வு கூட்டம் நடத்தி யது. மத்திய ஜவுளித்துறை இணைச்செயலர் பிரஜெக்ட்டா வர்மா, ஐக்கிய நாடுகள் சபையின் இந்திய பிரதிநிதி ஓசியினிமி பங்கேற்றனர்.
அதில், திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், தொழில் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்திராஜன் கூறியதாவது:
நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள, 'ஏ - டப்' திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். திருப்பூர் பொது சுத்திகரிப்பு நிலையங்களில், சோலார் மின் கட்டமைப்பை ஏற்படுத்த மானியம் வழங்க வேண்டும். 'மிக்ஸர் சால்ட்' உப்பை அப்புறப்படுத்தும் தொழில்நுட்பத்தை வழங்க வேண்டும்.
சுத்திகரிப்பு நிலையங்களில், 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதை பாராட்டி, 'வாட்டர் கிரெடிட்' அங்கீகாரம் வழங்க வேண்டு மெனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
சாய ஆலைகளின் அத்தியாவசிய தேவைகள் குறித்து கடிதம் வழங்கிஉள்ளோம். விரைவில் மத்திய அமைச்சர்களை சந்திக்க திட்டமிட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.