தி.மு.க., கிளை செயலர் வீட்டில் புடவைகள் பறிமுதல்
தி.மு.க., கிளை செயலர் வீட்டில் புடவைகள் பறிமுதல்
தி.மு.க., கிளை செயலர் வீட்டில் புடவைகள் பறிமுதல்
UPDATED : ஜூலை 04, 2024 05:07 AM
ADDED : ஜூலை 04, 2024 05:06 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதி ஆசாரங்குப்பத்தில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக தி.மு.க., கிளைச் செயலர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த புடவை, வேட்டி, சட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி, கோலியனுார் ஒன்றியம், ஆசாரங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். தி.மு.க., கிளைச் செயலர். இவருடைய வீட்டில் வாக்காளர்களுக்கு பரிசாக வழங்க, புடவைகளை பதுக்கி வைத்திருப்பதாக தொகுதி தேர்தல் அலுவலருக்கு புகார் வந்தது.
அதைத் தொடர்ந்து நேற்று, இடைத்தேர்தலுக்கான நிலை கண்காணிப்புக் குழு அலுவலர் இளையராஜா தலைமையில் அதிகாரிகள் ராமலிங்கம் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு பதுக்கி வைத்திருந்த புடவைகள், வேட்டி, சட்டைகளை பறிமுதல் செய்தனர்.
![]() |
இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட பா.ம.க., செயலர் பாலயோகி தலைமையில் கட்சி நிர்வாகிகள், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கக் கோரியும், தி.மு.க., வேட்பாளரை தகுதிநீக்கம் செய்யக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த டி.எஸ்.பி.,க்கள் சுரேஷ், சுரேஷ் பாண்டியன், இன்ஸ்பெக்டர் ரேவதி மற்றும் காணை போலீசார் பா.ம.க.,வினரிடம் பேசி சமாதானம் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட புடவைகளை, நிலைக் கண்காணிப்புக் குழு அதிகாரிகள், தொகுதி தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர். பின் அது கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து, பா.ம.க., வழக்கறிஞர் பாலு, சிவகுமார் எம்.எல்.ஏ., மற்றும் கட்சியினர், மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியான கலெக்டர் பழனியை நேற்று சந்தித்து, நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தனர்.