'பழங்கோவிலை அழிப்பது வரலாற்று துரோகம்'
'பழங்கோவிலை அழிப்பது வரலாற்று துரோகம்'
'பழங்கோவிலை அழிப்பது வரலாற்று துரோகம்'
UPDATED : ஜூன் 13, 2024 04:20 AM
ADDED : ஜூன் 13, 2024 01:59 AM

சென்னை:''பழமையான கோவில்களை அழிப்பது, வரலாற்றுக்கு நாம் செய்யும் துரோகம்,'' என, மத்திய தொல்லியல் துறையின் தென்மண்டல ஆலய பாதுகாப்பு பிரிவு கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறினார்.
அவர் கூறியதாவது:
தமிழகத்தில், 50,000க்கும் மேற்பட்ட பழமையான கோவில்கள் உள்ளன. கடந்த ஆண்டு அக்., முதல் இந்தாண்டு மார்ச் வரை, 500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட 250க்கும் மேற்பட்ட கோவில்களை அடையாளம் கண்டிருக்கிறோம்.
அவை மிகவும் வரலாற்று முக்கியத்துவம் உள்ள, கவனிக்கப்படாத கோவில்களாகவும், அழியும் நிலையிலும் உள்ளன.
சென்னையில் பல்லாவரத்தை அடுத்துள்ள அனகாபுத்துாரில், சோழர்கள் காலத்தைச் சேர்ந்த சிவன் கோவில் உள்ளது.
அங்கு சமீபத்தில் ஆய்வு செய்தோம். அங்கு பழமையான எந்த அமைப்பும் இல்லை. கருவறை முதல் எல்லாவற்றையும் தற்கால பாணியில் புதுப்பித்துள்ளனர். இதுபோல், பல கோவில்களின் பழமை அழிக்கப்பட்டு விட்டது.
இது, வரலாற்றுக்கு செய்யும் துரோகம்.
கோவில்கள், பழைய வரலாற்றை தாங்கி நிற்கும் சாட்சிகள். அவற்றில் உள்ள கல், மண், சிலை, கோபுரம், பிரகாரம் அனைத்தும் வரலாற்று தடயங்கள். அவற்றை அழித்து புதுப்பிப்பது, நம் வரலாற்றை நாமே அழிப்பதற்கு சமம்.
வரலாறு இல்லாதவர்கள் தான் புதிதாக கட்டுமானங்களை எழுப்புவர். நாம் நீண்ட பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் கொண்டவர்கள் என்பதை வெளிநாட்டினருக்கும், அடுத்த தலைமுறைக்கும் சொல்ல வேண்டும்.
அதற்கு, பழமையான கோவில்களை அதே நிலையில் பராமரித்து, பாதுகாக்க வேண்டும். அதற்கு முன், அவற்றில் உள்ள வரலாற்று ஆவணங்களை ஆவணப்படுத்தி, நுால்களாக்க வேண்டும். அதற்கான பணிகளை விரைவில் துவக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.