அரபி, வங்கக்கடலில் சூறாவளி 1ம் தேதி வரை மீனவர்களுக்கு தடை
அரபி, வங்கக்கடலில் சூறாவளி 1ம் தேதி வரை மீனவர்களுக்கு தடை
அரபி, வங்கக்கடலில் சூறாவளி 1ம் தேதி வரை மீனவர்களுக்கு தடை
ADDED : ஜூன் 28, 2024 02:27 AM

சென்னை: வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் பெரும்பாலான பகுதிகளில், சூறாவளி காற்றால் அலைகள் கொந்தளிப்பு மற்றும் சீற்றத்துடன் காணப்படுவதால், வரும், 1ம் தேதி வரை மீனவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் வரும், 1ம் தேதி வரை சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பு அளவை விட, 3 டிகிரி செல்ஷியஸ் அதிகம் பதிவாகும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சம், 29 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும்.
வங்கக்கடலில், மத்திய, வடகிழக்கு, தெற்கு, வடமேற்கு, வட ஆந்திர கடலோரம் ஆகிய பகுதிகளில், மணிக்கு 55 கி.மீ., வேகம் வரை சூறாவளி காற்று வீசுகிறது.
அரபிக்கடலில், தென்மேற்கு, தென்கிழக்கு, மத்திய கிழக்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு ஆகிய இடங்களில், மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசுகிறது.
கடல் அலைகள் கொந்தளிப்புடன் சீற்றமாக காணப்படுகின்றன. எனவே, மீனவர்கள் வரும், 1ம் தேதி வரை மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம், விண்ட் வொர்த் எஸ்டேட் பகுதியில், 15 செ.மீ., மழை பெய்துள்ளது. மாநிலம் முழுதும், 50க்கும் மேற்பட்ட இடங்களில் மழை பெய்துள்ளது.
சூறாவளி பரவல்
தென் மேற்கு பருவமழை காலத்தில், பெரும்பாலும் அரபிக்கடலில் காற்றின் வீச்சு அதிகமாக இருக்கும். அடிக்கடி சூறாவளி வீசும். இந்த முறை தென் மேற்கு பருவமழை தீவிரமாக உள்ள அதேநேரத்தில், வங்கக்கடல் வழியாகவும், தென் மேற்கில் இருந்து காற்றின் திசை மாறுபட்டு செல்கிறது. அதனால், வங்கக்கடலிலும் காற்று வேகமாக வீசுகிறது. இதுபோன்று எப்போதாவது நிகழும். எனவே தான், மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
- பாலச்சந்திரன்,
தென்மண்டல தலைவர், இந்திய வானிலை ஆய்வு மையம்.