வக்கீல்கள் குடும்ப நிவாரண நிதி ரூ.7 கோடி விடுவிக்க ஐகோர்ட் உத்தரவு
வக்கீல்கள் குடும்ப நிவாரண நிதி ரூ.7 கோடி விடுவிக்க ஐகோர்ட் உத்தரவு
வக்கீல்கள் குடும்ப நிவாரண நிதி ரூ.7 கோடி விடுவிக்க ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஜூன் 28, 2024 02:39 AM

சென்னை: உயிரிழந்த வழக்கறிஞர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க, இடைக்காலமாக, 7 கோடி ரூபாய் விடுவிக்கும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.
புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் நல நிதி சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்தக் கோரி, பரிதா பேகம் என்பவர் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், குமரப்பன் அடங்கிய அமர்வில், விசாரணையில் உள்ளது.
நிலுவை
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, இளம் வழக்கறிஞர்களின் பணியை பயன்படுத்தும் மூத்த வழக்கறிஞர்கள், குறைந்தபட்சம் 20,000 ரூபாய் உதவித் தொகை வழங்க வேண்டும் என்று, நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இவ்வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உயிரிழந்த வழக்கறிஞர்களின் குடும்பங்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணம் கோரி, 441 விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
வழக்கறிஞர்களுக்கான சேம நல நிதி, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. உயிரிழந்த வழக்கறிஞர்களின் குடும்பத்தினரிடம் இருந்து பெறப்பட்ட, 441 விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பதாகவும், அவற்றில் பல விண்ணப்பங்கள் பழையது என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதிகரிக்கப்பட்ட நல நிதிக்கு, கூடுதல் பணத்தை விடுவிக்க வேண்டியது அரசின் பொறுப்பு. ஆனால், இன்னும் வழங்கப்படவில்லை.
அரசு ஊழியர்களுக்கான சலுகைகளை அவ்வப்போது அரசு வழங்கும் போது, வழக்கறிஞர்களுக்கான நல நிதியையும் தாமதமின்றி வழங்க வேண்டும்.
நீண்ட நாட்களாக விண்ணப்பங்களை நிலுவையில் வைத்திருப்பதற்கு எந்த காரணமும் இல்லை.
தற்போது, சேம நல நிதி கணக்கில், 13.03 கோடி ரூபாய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. வழக்கறிஞர்களின் திடீர் மரணத்தால், அவர்களின் குடும்பத்தினருக்கு உதவித்தொகை வழங்கப்பட வேண்டும். எனவே, 10 நாட்களில், 7 கோடி ரூபாயை இடைக்காலமாக அரசு விடுவிக்க வேண்டும்.
'கிரெடிட்'
இந்த தொகையை, உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பெயருக்கு அனுப்ப வேண்டும். பின், வழக்கறிஞர்கள் நல நிதி அறக்கட்டளை கணக்கில், அந்த தொகையை, தலைமை பதிவாளர் 'கிரெடிட்' செய்ய வேண்டும்.
வழக்கறிஞர்கள் உயிரிழந்த தேதி அடிப்படையில், நிவாரணத் தொகையை, அறக்கட்டளை தலைவர் என்ற முறையில் அட்வகேட் ஜெனரல் வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து, அறிக்கை அளிக்க, விசாரணையை, ஜூலை 19க்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.