பாலின சார்பற்ற கழிப்பறை அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
பாலின சார்பற்ற கழிப்பறை அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
பாலின சார்பற்ற கழிப்பறை அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஜூன் 08, 2024 01:31 AM
சென்னை:பொது இடங்களில் பாலின சார்பற்ற கழிப்பறைகள் கட்டப்பட்டது தொடர்பாக, விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், பிரெட் ரோஜர்ஸ் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனு:
கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில், 22,364 திருநங்கையர் உள்ளனர். இவர்களுக்கு முறையான கழிப்பறை வசதிகள் இல்லை. இது, அவர்களின் அடிப்படை உரிமை மறுக்கப்படுவதாகும்.
கல்வி நிறுவனங்கள், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில், ஒருவர் செல்லும் வகையில் பாலின சார்பற்ற கழிப்பறைகளை அமைக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு, பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது சபீக் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, 'ஏற்கனவே உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறைகள், பாலின சார்பற்ற கழிப்பறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் பாலின சார்பற்ற கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்த நீதிபதிகள், பாலினசார்பற்ற கழிப்பறைகள் கட்டப்பட்டது தொடர்பாக, விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.