இன்று முதல் ஆகஸ்ட், 2 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
இன்று முதல் ஆகஸ்ட், 2 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
இன்று முதல் ஆகஸ்ட், 2 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
ADDED : ஜூலை 28, 2024 06:48 AM

சென்னை: 'தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இன்று முதல் ஆகஸ்ட், 2 வரை, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் இயக்குனர் செந்தாமரை கண்ணன் அறிக்கை:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தரைக்காற்று மணிக்கு, 30 முதல் 40 கி.மீ., வேகத்தில் வீசலாம். நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை முதல் ஆக., 2 வரை, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம், அவலாஞ்சியில் 18; மேல் பவானியில் 9; விண்ட் வொர்த் எஸ்டேட், பார்வூட், குந்தா பாலம் பகுதிகளில் தலா 7 செ.மீ., மழை பதிவானது.
மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில், சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.