'ஏழை மாணவர்களுக்கான 25% ஒதுக்கீட்டில் சி.பி.எஸ்.இ., பள்ளிகளை சேர்க்க இயலாது'
'ஏழை மாணவர்களுக்கான 25% ஒதுக்கீட்டில் சி.பி.எஸ்.இ., பள்ளிகளை சேர்க்க இயலாது'
'ஏழை மாணவர்களுக்கான 25% ஒதுக்கீட்டில் சி.பி.எஸ்.இ., பள்ளிகளை சேர்க்க இயலாது'
UPDATED : ஜூலை 03, 2024 03:28 AM
ADDED : ஜூலை 02, 2024 09:32 PM

சென்னை:'பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கான, 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளை சேர்க்க இயலாது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கடந்த, 2009ல் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் அமலுக்கு வந்தது. இச்சட்டத்தின்படி, பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கு, தனியார் பள்ளிகளில், 25 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
நிராகரிப்பு
இந்த ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் போது, பள்ளி அமைந்துள்ள இடத்தில் இருந்து, 1 கி.மீ., துாரத்துக்குள் வசிக்கவில்லை என, விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக கோவையை சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
மனுவில், 'இருப்பிடம் 1 கி.மீ., துாரத்துக்குள் இருக்க வேண்டும் என்பதை அதிகரிக்க வேண்டும்; மாணவர்கள் சேர்க்கையை வெளிப்படையாக நடத்த வேண்டும். சி.பி.எஸ்.இ.,- ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளிலும், 25 சதவீதம் ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்' என கூறப்பட்டது.
இம்மனு, பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது ஷபிக் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எல்.பி.சண்முகசுந்தரம், “1 கி.மீ., துாரத்துக்குள் வசிக்கவில்லை என விண்ணப்பங்களை நிராகரிப்பது சரியல்ல.
“ஆந்திர மாநிலத்தில் இதுகுறித்து விதிகள் உள்ளன. 25 சதவீத ஒதுக்கீட்டில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை சேர்ப்பதற்கு முடிவெடுக்க, மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது,” என்றார்.
நிதிச்சுமை
தமிழக அரசு தரப்பில், அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் ஆஜராகி வாதாடியதாவது:
தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு, மாநில அரசின் கட்டண நிர்ணயக்குழு, கல்வி கட்டணங்களை நிர்ணயிக்கிறது. அதன் அடிப்படையில், 25 சதவீத ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை, அரசு செலுத்துகிறது.
ஆனால், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, மாநில அரசின் கட்டண நிர்ணய குழு, கட்டணங்களை நிர்ணயிக்க முடியாது. அதனால், அந்தப் பள்ளிகளை, 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்க இயலாது.
மேலும், 1 கி.மீ., இடைவெளியில் அரசு தொடக்கப்பள்ளியும், 3 கி.மீ., இடைவெளியில் அரசு நடுநிலைப்பள்ளியும் உள்ளது. தமிழகம் முழுதும், 5,000 பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் உள்ளனர். இதனால், அரசுக்கு நிதிச்சுமையும் உள்ளது.
இவ்வாறு அவர் வாதாடினார்.
இதையடுத்து, விண்ணப்பங்கள் நிராகரிப்பு, அதற்கான காரணங்கள் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய, விரிவான பதில் மனுத்தாக்கல் செய்ய, அரசுக்கு உத்தரவிட்ட முதல் பெஞ்ச், விசாரணையை, வரும் 18ம் தேதிக்கு தள்ளி வைத்தது.