Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ பொன்மாணிக்கவேல் வழக்கு சி.பி.ஐ., விசாரணைக்கு தடை

பொன்மாணிக்கவேல் வழக்கு சி.பி.ஐ., விசாரணைக்கு தடை

பொன்மாணிக்கவேல் வழக்கு சி.பி.ஐ., விசாரணைக்கு தடை

பொன்மாணிக்கவேல் வழக்கு சி.பி.ஐ., விசாரணைக்கு தடை

ADDED : மார் 14, 2025 01:07 AM


Google News
மதுரை:சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனுக்கு உதவியதாக ஓய்வு பெற்ற ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் மீது சி.பி.ஐ., பதிந்த வழக்கின் மீதான மேல் விசாரணைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்தது.

தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.,யாக பொன்மாணிக்கவேல் பணிபுரிந்தார். இவர், 2018ல் ஓய்வு பெற்றார். சர்வதேச சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனை கைது செய்தார். அவரது வாக்குமூலம் அடிப்படையில், திருவள்ளூரில் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த காதர் பாஷா, கோயம்பேடு சிறப்பு எஸ்.ஐ.,யாக இருந்த சுப்புராஜ் மீது பொன்மாணிக்கவேல் வழக்கு பதிந்தார்.

காதர் பாஷா, 'தீனதயாளனை வழக்கு ஒன்றில் தப்பிக்க வைக்க என் மீது பொய் வழக்கு பதியப்பட்டது. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.

அந்நீதிமன்றம்,'சி.பி.ஐ., விசாரித்து முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உத்தரவிட்டது.

பொன்மாணிக்கவேல் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. அவருக்கு, 2024 ஆக., 30ல் உயர் நீதிமன்ற கிளை முன்ஜாமின் அனுமதித்தது.

ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கையை தனக்கு வழங்க சி.பி.ஐ.,க்கு உத்தரவிடக்கோரி, மதுரை கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பொன்மாணிக்கவேல் மனு செய்தார். அதை அந்நீதிமன்றம் திருப்பி அனுப்பியது.

எதிர்த்து, பொன்மாணிக்கவேல் தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்ற கிளையில் நிலுவையில் உள்ளது. சி.பி.ஐ., பதிந்த வழக்கை ரத்து செய்யக்கோரி பொன்மாணிக்கவேல் மற்றொரு மனு தாக்கல் செய்தார்.

இதில், நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு:

சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு அதிகாரியாக பொன்மாணிக்கவேலை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அவரது தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பல சிலைகளை மீட்டுள்ளனர்.

அவர் பொறுப்பேற்பதற்கு முன் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு என ஒன்று இருந்ததாகவே தெரியவில்லை. அவருக்கு எதிராக வழக்கு பதிய போதிய ஆதாரங்கள் இல்லை.

ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கை மேம்போக்காக உள்ளது. உயர்ந்தபட்ச விசாரணை அமைப்பான சி.பி.ஐ., எப்படி வழக்கு பதிந்தது என தெரியவில்லை. போதிய ஆதாரங்களை இந்நீதிமன்றத்தில் சி.பி.ஐ., தாக்கல் செய்யவில்லை.

இவ்வாறு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, ''மனுதாரருக்கு எதிராக பதிவான வழக்கின் மீது மேல் விசாரணை மேற்கொள்ள, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. விசாரணை மார்ச் 17க்கு ஒத்தி வைக்கப்படுகிறது,'' என, உத்தரவிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us