தானியங்கி பட்டா மாறுதல்; வருவாய் துறை அறிவுறுத்தல்
தானியங்கி பட்டா மாறுதல்; வருவாய் துறை அறிவுறுத்தல்
தானியங்கி பட்டா மாறுதல்; வருவாய் துறை அறிவுறுத்தல்
ADDED : ஜூன் 11, 2024 03:18 AM

சென்னை : 'தானியங்கி முறை பட்டா மாறுதல் பணிக்காக, பத்திரப்பதிவின்போது, சரியான மொபைல் போன் எண்ணை அளிக்க வேண்டும்' என, வருவாய் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
தானியங்கி பட்டா மாறுதல் திட்டத்தில், ஒரு சர்வே எண்ணுக்கு உட்பட்ட முழு சொத்தும் கைமாறும் போது, அதற்கான பத்திரப்பதிவு அடிப்படையில், பட்டா மாறுதல் செய்யப்படும்.
தானியங்கி முறை
பெரும்பாலான சார் - பதிவாளர் அலுவலகங்களில், இதற்கான நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இதில், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், வரும் 15 முதல் தானியங்கி பட்டா மாறுதல் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த, பதிவுத்துறை, வருவாய் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக சார் - பதிவாளர்கள், ஆவண எழுத்தர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதுபற்றி, வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மொபைல் எண்
தானியங்கி முறை பட்டா மாறுதல் திட்டத்தில், பெரும்பாலான விண்ணப்பங்கள் பாதியில் முடங்குகின்றன.
இந்த விண்ணப்பங்களில், சொத்து வாங்குவோர் தங்களது சரியான மொபைல் போன் எண்ணை கொடுக்காமல் இருப்பதே, விண்ணப்பங்கள் முடங்க காரணம் என, தெரியவந்துள்ளது.
'ஆன்லைன்' முறையில் பத்திரப்பதிவுக்கு விபரங்களை உள்ளீடு செய்யும் போது, சொத்து வாங்குவோரின் உண்மையான மொபைல் போன் எண்ணை பதிவு செய்ய வேண்டியது அவசியம்.
எனவே, பத்திரப்பதிவு பணியின் போது, மொபைல் போன் எண் விபரத்தை சரியாக பதிவிடுவதை, சார் - பதிவாளர்கள், ஆவண எழுத்தர்கள் உறுதி செய்ய வேண்டும். பொது மக்களும் இதில் பொறுப்புடன் நடக்க வேண்டும்.
அப்போது தான் பட்டா மாறுதல் தொடர்பாக, எஸ்.எம்.எஸ்., தகவல்களை பெற முடியும். இதன் அடிப்படையிலேயே தொடர் நடவடிக்கைகள் எடுக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.