ADDED : ஜூலை 03, 2024 02:34 AM

அண்ணாமலை, கோவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
லோக்சபாவில் பேசிய எம்.பி., வெங்கடேசன், செங்கோல் என்பது பெண்களை அடிமைப்படுத்துவதன் அடையாளம் என்றார். இதே, வெங்கடேசன், மதுரை பெண் மேயர் இந்திராணிக்கு செங்கோல் கொடுத்திருக்கிறார். (புகைப்பட ஆதாரத்தை காட்டினார்). இதற்கு இந்தப் பெண் மேயரை அடிமைப்படுத்தியதாக அர்த்தமா?
நீங்கள் செங்கோலைக் கையில் பிடிக்கலாம்; அது தவறில்லை. மோடி பார்லிமென்டில் வைத்தால் அது தவறு. இதுதான் இவர்களின் அரசியல் போலி முகத்திரை.
தி.மு.க., நம்மைக் கைவிட்டுவிடக்கூடாது என்பதற்காக, வெங்கடேசன் பேசும் கருத்து கொஞ்சமும் ஏற்புடையது இல்லை. யார் பிற்போக்குத்தனமான அரசியல் செய்கிறார்கள் என்பதை மக்கள் முடிவு செய்யட்டும்.
தேசிய கல்விக் கொள்கையில் தாய்மொழிதான் பிரதானமாக இருக்க வேண்டும் என கூறினோம். தமிழக அரசு மாநிலக் கல்விக் கொள்கையில், இப்போது அதையே அறிவித்துள்ளது.
ஒரு பக்கம் ஹிந்தி வேண்டாம் எனக் கூறிவிட்டு உருது பள்ளிகளை துவக்குவது குறித்து, மாநில கல்விக் கொள்கை பற்றி பேசுகிறது. மதராஸாவில் கற்பிக்கும் பாடங்களை, பட்டப்படிப்புகளை ராணுவம், சிவில், வங்கித் தேர்வுகளில் அங்கீகரிக்க வேண்டும் என மாநில அரசின் கல்விக் கொள்கை கூறுகிறது.
தமிழகத்துக்கு மூன்று முதல்வர்கள்
தமிழகத்துக்கு மட்டும் மூன்று முதல்வர்கள். கோப்பில் கையெழுத்து வாங்க, ஈ.சி.ஆரில் சபரீசன், அண்ணா நகரில் கார்த்திக், பிறகு உதயநிதியைப் பார்க்க வேண்டும். நான்கு மேயர்களை தி.மு.க., மாற்றப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது அவர்களின் உட்கட்சி பிரச்னை.
இவ்வாறு, அண்ணாமலை தெரிவித்தார்.