'சந்தை கடையல்ல; இது கோர்ட்' ரங்கராஜனுக்கு ஐகோர்ட் கண்டனம்
'சந்தை கடையல்ல; இது கோர்ட்' ரங்கராஜனுக்கு ஐகோர்ட் கண்டனம்
'சந்தை கடையல்ல; இது கோர்ட்' ரங்கராஜனுக்கு ஐகோர்ட் கண்டனம்
ADDED : மார் 14, 2025 12:37 AM
சென்னை:துணை முதல்வர், ஜீயர்கள் குறித்து அவதுாறு கருத்துகளை பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில், ரங்கராஜன் நரசிம்மன் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், அவரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர் ரங்கராஜன் நரசிம்மன். இவர், தன் சமூக வலைதள பக்கத்தில், 'சனாதனத்தை பாதுகாத்த உதயநிதி' என்ற தலைப்பில், ஸ்ரீபெரும்புதுார் ஜீயருடன் பேசிய உரையாடல் அடங்கிய வீடியோவை பதிவிட்டார்.
தன் அனுமதியின்றி உரையாடலை வெளியிட்டு, பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக, ரங்கராஜன் நரசிம்மன் மீது நடவடிக்கை கோரி, சென்னை மத்திய குற்றப்பிரிவில், ஜீயர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
ரங்கராஜன் நரசிம்மன் மீது, ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, திருச்சி போலீசார் கைது செய்தனர். பின், ஜாமினில் வெளியே வந்தார்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், ரங்கராஜன் நரசிம்மன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. காவல் துறை தரப்பில், 'இந்த வழக்கில் புலன் விசாரணை நடந்து வருவதால், வழக்கை ரத்து செய்யக் கூடாது' என, எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன், ''என்னை பழிவாங்கும் நோக்குடன், அரசு இந்த வழக்கை பதிவு செய்துள்ளது,'' என சத்தமாக வாதிட்டார். அவரை கண்டித்த நீதிபதி, 'இது சந்தை கடையல்ல, நீதிமன்றம்' என்றார். இதையடுத்து, உடனே ரங்கராஜன் நரசிம்மன் மன்னிப்பு கேட்டார்.
பின், 'ரங்கராஜன் நரசிம்மன் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது' எனக் கூறி, அவரது மனுவை, நீதிபதி தள்ளுபடி செய்தார். இதுகுறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.