546 தனிப்படை போலீசாரின் கண்காணிப்பில் 26,000 ரவுடிகள்
546 தனிப்படை போலீசாரின் கண்காணிப்பில் 26,000 ரவுடிகள்
546 தனிப்படை போலீசாரின் கண்காணிப்பில் 26,000 ரவுடிகள்
ADDED : ஜூலை 14, 2024 07:26 AM

சென்னை: தமிழகத்தில், 546 தனிப்படை போலீசாரின் கண்காணிப்பில், 26,432 ரவுடிகள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில், சமீபகாலமாக ரவுடிகளின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த, காவல் துறையில் ஏற்கனவே உள்ள, ரவுடிகளின் பட்டியல் மறுவரையறை செய்யப்பட்டுள்ளது.
புதிதாக தலைதுாக்கி உள்ள ரவுடிகள், அவர்களின் சுய விபரம், புகைப்படம், வழக்கு விபரங்கள் அதில் சேர்க்கப்பட்டுள்ளன. கொடூர குற்றங்களில் ஈடுபடும், 'ஏ பிளஸ்' வகை ரவுடிகள், 421 பேர் உள்ளனர். கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் குற்றங்களில் ஈடுபடும், 'ஏ' பிரிவு ரவுடிகள், 836 பேர் உள்ளனர்.
அதேபோல, கட்டப்பஞ்சாயத்து, மாமூல் வசூலிப்பு என, அட்டூழியம் செய்யும் ரவுடிகளுக்கான, 'பி' பிரிவில், 6,398 பேர் உள்ளனர். அடிதடி, வீண் தகராறு, கலவரத்தை துாண்டி விடுதல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும், 'சி' பிரிவு ரவுடிகள், 18,807 பேர் உள்ளனர்.
மாநிலம் முழுதும், 'ஏ பிளஸ் முதல் சி' பிரிவு வரை உள்ள, 26,432 ரவுடிகள், 546 தனிப்படை போலீசாரின் கண்காணிப்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
ரவுடிகள் ஒழிப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
ரவுடிகளை ஒழிக்க, அவர்களின் சமூக விரோத செயலை கட்டுப்படுத்த, 546 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தற்போது செயலில் உள்ள ரவுடிகள், தொழிலை விட்டு வெளியேறிய ரவுடிகள், தாதாக்கள், அவர்களை பழி வாங்க துடிக்கும் ரவுடிகளை, கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளோம். அவர்களின் சொத்து விபரங்கள், வருமானம் குறித்து விசாரிக்கவும் மண்டல வாரியாக போலீசாரை நியமித்துள்ளோம்.
சிறையில் உள்ள ரவுடிகள் யார் யார்; அவர்களுக்கு இடையே பகை உள்ள ரவுடிகள் உள்ளனரா என்பது குறித்தும் கண்காணிக்கப்படுகிறது. தனிப்படையின் ஒட்டுமொத்த பார்வையும் ரவுடிகள் பக்கம் திரும்பி உள்ளது.
நிலுவையில் உள்ள வழக்குகள், நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ரவுடிகள் மீதான கைது நடவடிக்கைகளை துரிதப்படுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.