7 மாவட்டங்களுக்கு 2 நாள் கனமழை எச்சரிக்கை
7 மாவட்டங்களுக்கு 2 நாள் கனமழை எச்சரிக்கை
7 மாவட்டங்களுக்கு 2 நாள் கனமழை எச்சரிக்கை
ADDED : ஜூலை 14, 2024 06:45 AM

சென்னை: 'தமிழகத்தில் ஓரிரு இடங்களில், இன்று மிதமான மழையும், நாளை மற்றும் நாளை மறுதினம் ஏழு மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் இயக்குனர் செந்தாமரைகண்ணன் அறிக்கை:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.
நாளை, தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை மாவட்ட மலை பகுதிகள், ஈரோடு, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்துார் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுதினம் நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில், ஓரிரு இடங்களில் கன மழையும், மற்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில், இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கடலுார் மாவட்டம் கீழச்செருவை பகுதியில், 23 செ.மீ., மழை பதிவானது. அதற்கு அடுத்தபடியாக, கடலுார் மாவட்டம் லக்கூரில் 14; செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் 13; திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 11; செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 10; மாமல்லபுரத்தில் 9 செ.மீ., மழை பதிவானது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
வரும் 17ம் தேதி வரை, மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில், சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும்.
மத்திய வங்கக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
***