ADDED : பிப் 25, 2024 06:18 AM
2018ல் தாம்பரம் --செங்கோட்டை இடையே அந்தியோதயா ரயில் இயக்கப்பட்டது. இருபதுக்கும் மேற்பட்ட முன்பதிவில்லா பெட்டி உள்ளது. இயக்கப்பட்ட இந்த ரயில் தென்காசி, விருதுநகர், சிவகங்கை மாவட்ட மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
தாம்பரத்தில் காலை 7:00 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணம், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் வழியாக இரவு 9:00 மணிக்கு செங்கோட்டை சென்றடையும் வகையிலும், மறு மார்க்கத்தில் செங்கோட்டையிலிருந்து காலை 6:00 மணிக்கு புறப்பட்டு அதே வழித்தடத்தில் திரும்ப பயணித்து இரவு 9:00 மணிக்கு தாம்பரம் சென்றடையும் வகையில் இந்த அந்தியோதயா ரயில் இயக்கப்பட்டது.
இந்த ரயிலில் தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு பயணிக்க ரூ. 240 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட்டதால் ஏராளமான ஏழைகள் குறைந்த கட்டணத்தில் சென்னைக்கு பயணித்து வந்தனர். வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே இயக்கப்பட்ட இந்த ரயில் பொதுமக்களிடம் அதிக வரவேற்பு பெற்றதால் தினசரி ரயிலாக இயக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்த்தனர்.
இந்த ரயிலின் மூலம் தென் மாவட்ட மக்கள் சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, விழுப்புரம் போன்ற டெல்டா மாவட்ட நகரங்களுக்கு பயணிக்கும் வசதி கிடைத்தது.
பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் இந்த ரயில் நிறுத்தப்பட்டது விருதுநகர், தென்காசி மக்களை அதிர்ச்சி அடைய செய்தது. தொடர்ந்து தாம்பரம்- செங்கோட்டை அந்தியோதயா ரயில் இயக்க வேண்டுமென ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனால், இந்த ரயில் நிறுத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது வரை இயக்கப்படவில்லை. இதனால் மக்கள் சென்னைக்கும், டெல்டா மாவட்டங்களுக்கும் செல்வதற்கு நேரடி ரயில் வசதி இல்லாமல் தவித்து வருகின்றனர்.
எனவே, நிறுத்தப்பட்ட தாம்பரம்- செங்கோட்டை அந்தியோதயா ரயிலை மீண்டும் இயக்க வேண்டுமென விருதுநகர், தென்காசி மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.