Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/இரும்பு சக்கரம் பொருத்தப்பட்ட டிராக்டர்களால் சாலைகள் சேதம்: விவசாயிகள் பெயரில் தொடரும் விதி மீறலால் விரைவில் சிதைவு

இரும்பு சக்கரம் பொருத்தப்பட்ட டிராக்டர்களால் சாலைகள் சேதம்: விவசாயிகள் பெயரில் தொடரும் விதி மீறலால் விரைவில் சிதைவு

இரும்பு சக்கரம் பொருத்தப்பட்ட டிராக்டர்களால் சாலைகள் சேதம்: விவசாயிகள் பெயரில் தொடரும் விதி மீறலால் விரைவில் சிதைவு

இரும்பு சக்கரம் பொருத்தப்பட்ட டிராக்டர்களால் சாலைகள் சேதம்: விவசாயிகள் பெயரில் தொடரும் விதி மீறலால் விரைவில் சிதைவு

ADDED : ஜூன் 07, 2025 01:05 AM


Google News
Latest Tamil News
ராஜபாளையம்: மாவட்டத்தில் விவசாய பரப்பை ஒட்டிய சாலைகளில் இரும்பு சக்கரம் (கேஜ் வீல்) பொருத்தப்பட்ட டிராக்டர்களை இயக்குவதால் அழுத்த கோடுகள் உருவாகி சாலைகளுக்கு நிரந்தர சேதத்தை ஏற்படுத்துவதுடன் அதன் ஆயுள் தன்மை குறைந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த நான்கு வருடங்களாக பருவ மழை பரவலாக பெய்து விவசாயம் செழித்து வருகிறது. விவசாய பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை அதிகரித்து வரும் சூழலில் மாடுகளை வைத்து ஏர் ஓட்டுதல், வண்டி மாடு உள்ளிட்ட பாரம்பரிய வேளாண் பணிகள் அரிதாகி விட்டன.

இதனால் உழவு, நடவு போன்ற வேளாண் பணிகளுக்கு இயந்திரங்களையே நாட வேண்டிய நிலை முற்றிலும் ஏற்பட்டுள்ளது.

இதில் முக்கியமாக உழவு என்பது டிராக்டர் மூலம் மட்டுமே நடைபெறுகிறது. கடினமான மண்ணை அடித்து பொடியாக்க வேண்டி டிராக்டர் டயர்களை கழற்றிவிட்டு அந்த இடத்தில் இரும்பு சக்கரம் பொருத்தி வயல்களை உழுகின்றனர்.

அதிக இழுவை திறன் எடை கூடுவதால் அழுத்தம் போன்ற காரணங்களுக்காக உழவில் நல்ல பலன் அளிக்கிறது.

இந்நிலையில் இரும்பு சக்கரம் பொருத்திய டிராக்டர்களை வயல்களில் மட்டுமே உழ வேண்டும். தார் சாலைகளில் இயக்கக் கூடாது என்று நெடுஞ்சாலைத் துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

இதையும் மீறி இரும்பு சக்கரம் பொருத்துவதற்கு ஏற்படும் தாமதம் போன்றவற்றிற்காக சாலைகளிலேயே இயக்கி வந்து

விவசாய நிலங்களுக்கு உழவு பணிகளை மேற்கொண்டு மீண்டும் சாலையிலேயே இயக்கி சென்று வருகின்றனர்.

ராஜபாளையம் வழியே செல்லும் விவசாய நிலங்களை ஒட்டிய தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, மாவட்ட சாலைகள் என முக்கிய ரோடுகள் அனைத்தும் இரும்பு சக்கரம் பொருத்திய டிராக்டர்களால் அழுத்தமான கோடுகளுடன் ஆங்காங்கே பிளவு பட்டு நிற்கிறது.

தற்போது தேவதானம், கோவிலுார் பகுதிகளில் அறுவடை முடிந்து நிலத்தை பண்படுத்தும் பணிகளுக்கு இரும்பு சக்கரம் பொருத்தி இயக்குவது அதிகரித்துள்ளது.

இதேபோல் ராஜபாளையம் கடம்பன் குளம் கண்மாய் ஒட்டிய தேசிய நெடுஞ்சாலையும், ஸ்ரீவில்லிபுத்துார் வழி தேசிய நெடுஞ்சாலையும், வத்திராயிருப்பு மெயின் ரோடும் இரும்பு சக்கரத்தால் ஆங்காங்கே பிளவு பட்டு அழுத்தமான பள்ளங்களுடன் உள்ளது. மழைக்காலங்களில் இவற்றில் தண்ணீர் தேங்கி விரைவில் சேதம் அடைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் போர்வையில் நேரத்தை மிச்சமாக்குவதாக கருதி சிலர் செய்யும் விதி மீறலால் சாலையின் தாங்கு திறன் பாதிக்கப்படுவதுடன் வாகன ஓட்டிகள் விபத்துக்கு உள்ளாகின்றனர்.

விவசாயிகளுக்கான தொடர் கூட்டங்களில் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி விதிமீறலுக்கு தடை ஏற்படுத்துவதுடன் இச்செயலில் ஈடுபடுவோர் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us