Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/பரிதவிப்பு: அடுக்கு மாடி குடியிருப்பில் குடியேற முடியாமல் ஒப்படைப்பு: ஆணை பெற்றும் அனுமதி கிடைக்காமல்....

பரிதவிப்பு: அடுக்கு மாடி குடியிருப்பில் குடியேற முடியாமல் ஒப்படைப்பு: ஆணை பெற்றும் அனுமதி கிடைக்காமல்....

பரிதவிப்பு: அடுக்கு மாடி குடியிருப்பில் குடியேற முடியாமல் ஒப்படைப்பு: ஆணை பெற்றும் அனுமதி கிடைக்காமல்....

பரிதவிப்பு: அடுக்கு மாடி குடியிருப்பில் குடியேற முடியாமல் ஒப்படைப்பு: ஆணை பெற்றும் அனுமதி கிடைக்காமல்....

UPDATED : ஜூலை 05, 2025 04:23 AMADDED : ஜூலை 05, 2025 02:58 AM


Google News
Latest Tamil News
ராஜபாளையம் மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சி சமத்துவபுரம் அருகே தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் கீழ் ரூ.80 கோடி மதிப்பில் மூன்று மாடியுடன் கூடிய 864 வீடுகள் கட்டப்பட்டது. 2020 மே மாதம் கட்டுமான பூமி பூஜை தொடங்கி தற்போது வரை முடிவு பெறாமல் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் அடித்தட்டு மக்களுக்கு குடிபுக வழியின்றி தவித்து வருகின்றனர்.

இக் குடியிருப்புகளில் குறைந்த வருவாய் உள்ள ஏழைகள், மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்கள், நீர் நிலைகளில் குடியிருந்து ஆக்கிரமிப்பு என வீடுகளை இழந்தோர் என பல்வேறு தரப்பினரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு பயனாளிகள் தேர்வு செய்துள்ளனர். குறிப்பாக மாவட்டத்தின் அனைத்து பகுதியில் இருந்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வீடும் சமையலறை, படுக்கையறை, குளியலறை, கழிப்பறை, வரவேற்பறை போன்ற வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. கட்டுமானம் தொடங்கி 15 மாதங்களுக்குள் முடிந்து பயனாளிகளிடம் ஒப்படைப்பு செய்திருக்க வேண்டும். ஒரு வழியாக ஐந்து ஆண்டுகளைக் கடந்து 45 நாட்களுக்கு முன் தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறப்பு விழா செய்தார்.

இதில் 100 பயனாளர்களுக்கு முதல் கட்டமாக வீடுகள் ஒப்படைப்பு வழங்கப்பட்டது. இருப்பினும் கழிவுநீர் சுத்திகரிப்பு பணிகள் முடிவடைய தாமதம் எனக்கூறி தற்போது வரை குடியிருப்பதற்கான அனுமதி வழங்காமல் வைத்துள்ளனர். இதனால் மின் இணைப்பு பெற முடியாமல் சிக்கலுக்கு உள்ளாகி உள்ளனர். ஏற்கனவே கழிவுநீர் சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்று சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்படும் நீரை கொண்டு செல்வதற்கு குழாய் மூலம் இணைப்பதற்கான பி.டி.ஓ., ஒப்புதல் என முழுமை பெறாமல் உள்ளது.

இதற்கிடையே குடியேறுவதற்கான ஒப்படைப்பு ஆணை பெற்றவர்களுக்கு பயனற்ற நிலையே உள்ளது. ஏற்கனவே பல ஆண்டுகளாக காத்திருந்து ஒப்படைப்பு ஆணை பெற்றவர்களுக்கே குடி புகுவதற்கான வழி தெரியாத நிலையில் மீதமுள்ள 764 பயனாளிகளின் நிலை ஏக்கத்திற்கு உள்ளாகி வருகிறது. தாமதிக்காமல் பணிகளை முடித்து பயனாளிகளிடம் ஒப்படைப்பு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மக்கள் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us