ADDED : செப் 22, 2025 03:55 AM

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இதையொட்டி நேற்று அதிகாலை 5:00 மணி முதல் தாணிப்பாறை மலையடிவாரத்தில் பக்தர்கள் குவிந்தனர். இதனால் அதிகாலை 5:45 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு மலையேற அனுமதிக்கப்பட்டனர். காலை 10:00 மணி வரை 15 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மலையேறியதாக அறநிலையத் துறையினர் தெரிவித்தனர்.
கோயிலில் சுந்தரலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சன்னதிகளில் அமாவாசை வழிபாடு பூஜைகளை கோயில் பூஜாரிகள் செய்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன், அறநிலையத் துறை ஊழியர்கள் செய்திருந்தனர்.
வத்திராயிருப்பு, சாப்டூர் போலீசார், வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.