Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சிவகாசியில் டிராபிக் போலீசார் பற்றாக்குறை போக்குவரத்து பாதிப்போடு விபத்திற்கு வாய்ப்பு

சிவகாசியில் டிராபிக் போலீசார் பற்றாக்குறை போக்குவரத்து பாதிப்போடு விபத்திற்கு வாய்ப்பு

சிவகாசியில் டிராபிக் போலீசார் பற்றாக்குறை போக்குவரத்து பாதிப்போடு விபத்திற்கு வாய்ப்பு

சிவகாசியில் டிராபிக் போலீசார் பற்றாக்குறை போக்குவரத்து பாதிப்போடு விபத்திற்கு வாய்ப்பு

ADDED : மே 22, 2025 12:23 AM


Google News
சிவகாசி: சிவகாசியில் டிராபிக் போலீசார் பற்றாக்குறையால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுவதோடு விபத்திற்கும் வழி வகுக்குறது. காலிப் பணியிடங்களை நிரப்பி சீரான போக்குவரத்திற்கு வழி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

சிவகாசியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மக்கள் தொகை அடிப்படையில் டிராபிக் போலீசார் நியமிக்கப்பட்டிருந்தனர். அன்றைய காலகட்டத்தில் நியமிக்கப்பட்ட டிராபிக் போலீஸ் பணியிடம் சரியாக இருந்தது. ஆனால் தற்போது மக்கள் தொகை எத்தனையோ மடங்கு உயர்ந்து விட்டது. டூவீலர், கார் உள்ளிட்ட வாகனங்களும் மக்கள் தொகைக்கு ஏற்ப அதிகரித்துள்ளது.

மேலும் தொழில் நகரான இங்கு அதிக அளவில் வாகனங்கள் வந்து செல்கின்றன. பஸ்களின் எண்ணிக்கை அதிகரித்து போக்குவரத்து பெருகிவிட்டது. ஆனால் டிராபிக் போலீஸ் மட்டும் குறைந்த அளவில் பணிபுரிகின்றனர். இங்கு காலை பள்ளி துவங்கும், முடியும் நேரத்தில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

சேர்மன் சண்முகம் நாடார் ரோடு, விளாம்பட்டி ரோடு, நான்கு ரத வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலால் அவதிப்பட நேரிடுகிறது. சிவகாசியில் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., க்கள் உட்பட 70 டிராபிக் போலீசார் பணியில் இருக்க வேண்டிய நிலையில் இங்கு 20 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். பணி நெருக்கடியால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதோடு அவ்வப்போது விபத்தும் ஏற்படுகிறது.

தவிர தற்போது சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பால பணிகள் நடந்து வருவதால் மாற்றுப்பாதையில் வாகனங்கள் வருகின்றன. ஒரே நேரத்தில் நகருக்குள் அதிக அளவில் வாகனங்கள் வருவதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படுகின்றது. இருக்கின்ற குறைந்த அளவு டிராபிக் போலீசாரால் போக்குவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே கூடுதலாக டிராபிக் போலீசார் நியமித்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us