Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பங்களிப்பு நிதி செலுத்தியும் தரம் உயராத பேராபட்டி அரசு உயர்நிலைப் பள்ளி; மேல்படிப்பை தொடர முடியாத பரிதாபம்

பங்களிப்பு நிதி செலுத்தியும் தரம் உயராத பேராபட்டி அரசு உயர்நிலைப் பள்ளி; மேல்படிப்பை தொடர முடியாத பரிதாபம்

பங்களிப்பு நிதி செலுத்தியும் தரம் உயராத பேராபட்டி அரசு உயர்நிலைப் பள்ளி; மேல்படிப்பை தொடர முடியாத பரிதாபம்

பங்களிப்பு நிதி செலுத்தியும் தரம் உயராத பேராபட்டி அரசு உயர்நிலைப் பள்ளி; மேல்படிப்பை தொடர முடியாத பரிதாபம்

ADDED : மார் 23, 2025 07:08 AM


Google News
சிவகாசி : சிவகாசி அருகே பேராபட்டி அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த மக்கள் பங்களிப்புத் தொகை ரூ. இரண்டு லட்சம் செலுத்தியும் பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லாததால் மாணவர்கள் பெற்றோர் ஏமாற்றத்தில் உள்ளனர். இதனால் மாணவிகள் மேல்படிப்பை தொடர முடியாத பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

சிவகாசி அருகே பேராபட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு நடுநிலை பள்ளியாக இருந்த இப்பள்ளி தன்னார்வலர்கள் இடம் வாங்கிக் கொடுத்த பின்னர் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு 10 ம் வகுப்பில் 50 மாணவர்கள் படிக்கின்றனர். 10ம் வகுப்பு முடித்த மாணவிகள் மேல்நிலைப் பள்ளிக்கு 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிவகாசிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால் பெரும்பான்மையான மாணவிகள் 10 ம் வகுப்போடு படிப்பை நிறுத்தி விடுகின்றனர்.

ஒரு சில மாணவர்களும் இடை நிற்கின்றனர். இதனைத் தொடர்ந்து இப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதற்காக 5 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் நிதியாக 2 லட்சம் ரூபாய் அரசுக்கு வழங்கப்பட்டது. ஆனால் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பேராபட்டியில் 10 ம் வகுப்பு முடித்த மாணவிகள் மேல்நிலைப் பள்ளியை தொடரவில்லை. இதே போல் அருகில் உள்ள அனுப்பன்குளம் உயர்நிலைப் பள்ளியிலும் 10 ம் வகுப்பிற்கு பின்னர் மாணவிகள் மேல்நிலைப் பள்ளி படிப்பை தொடர வழியில்லாமல் படிப்பை இடைநிறுத்தி விடுகின்றனர்.

இதனால் ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் 70 சதவீதம் மாணவிகளும் 20 சதவீதம் மாணவர்களும் மேல்நிலைப் படிப்பை தொடரவில்லை. இவர்கள் ஏதேனும் வேலைக்கு சென்று விடுகின்றனர். இதனிடையே சமீபத்தில் பட்ஜெட்டில் பாப்பி ரெட்டியபட்டி சத்தியமங்கலம் உள்ளிட்ட 14 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பேராபட்டி பள்ளி குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. இதனால் மாணவர்கள் பெற்றோர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இப்பகுதி பெற்றோர்கள் கூறுகையில், பேராபட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் இடை நிற்றல் அதிகரித்து வருகின்றது. இங்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு இடவசதி உண்டு, மைதானமும் உண்டு. எனவே மாணவர்களின் இடை நிற்றலை கருத்தில் கொண்டு பேராபட்டி உயர்நிலைப் பள்ளியை வரும் கல்வியாண்டில் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us