Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/பட்டாசு கழிவுகள் பாதுகாப்பாக எரிப்பது கண்காணிக்கப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு

பட்டாசு கழிவுகள் பாதுகாப்பாக எரிப்பது கண்காணிக்கப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு

பட்டாசு கழிவுகள் பாதுகாப்பாக எரிப்பது கண்காணிக்கப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு

பட்டாசு கழிவுகள் பாதுகாப்பாக எரிப்பது கண்காணிக்கப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு

ADDED : ஜூலை 03, 2024 05:30 AM


Google News
மாவட்டத்தில் சிவகாசி, விருதுநகர், சாத்துார், வெம்பக்கோட்டை சுற்றுப்பகுதியில் நாக்பூர், சென்னை, டி.ஆர்.ஓ., உரிமம் பெற்ற 1070 பட்டாசு ஆலைகள் இயங்குகின்றன.

எந்த உரிமம் பெற்றிருந்தாலும் பட்டாசு ஆலை அமைக்கும்போது அதன் வளாகத்திலேயே பட்டாசு கழிவுகளை எரிப்பதற்கு தனியாக குழி அமைக்க வேண்டும்.

இதனைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைத்திருக்க வேண்டும். இதுதான் பட்டாசு கழிவுகளை கொட்டி பாதுகாப்பாக எரிக்க வேண்டும்.

பாதுகாப்பு குழி குறித்து ஆய்வு செய்து உறுதிப்படுத்த பின்னரே ஆலைகளுக்கு உரிமம் வழங்கப்படும்.

இந்நிலையில் பெரும்பான்மையான பட்டாசு ஆலைகளில் அதன் கழிவுகளை ஆலை வளாகத்தில் உள்ள குழியில் பாதுகாப்பாக தீயிட்டு எரிக்காமல், வெளியிலும், பொது இடங்களிலும் ரோட்டிலும் கொட்டி விடுகின்றனர். இதனால் அவ்வப்போது எதிர்பாராமல் வெடி விபத்து ஏற்படுகின்றது.

மூன்று மாதங்களுக்கு முன்பு செங்கமலபட்டியில் விளையாட்டு மைதானம் அருகே பட்டாசு கழிவுகள் கொட்டப்பட்டிருந்தது. இதன் அருகே அமர்ந்திருந்த மூன்று வாலிபர்கள் எதிர்பாராமல் தீ வைத்த போது கழிவுகளில் தீ பட்டு வெடி விபத்து ஏற்பட்டு காயம் அடைந்தனர்.

இதே போல் வச்ச காரப்பட்டியில் சிறுநீர் கழிப்பதற்காக ஒதுங்கிய நபர் இதே பட்டாசு கழிவு வெடித்து காயம் அடைந்தார்.

இரு நாட்களுக்கு முன்பு விருதுநகர் அருகே வி.முத்துராமலிங்கபுரம் கிராமத்தில் உள்ள சுவரம்பட்டி ஊருணியில் தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் சீரமைக்கும் பணி நடந்தது.

இதில் பணி முடிந்த பின்னர் வேலை செய்தவர்கள் சென்ற நிலையில் குப்பைகளை ஒரே இடத்தில் குவித்து வைத்து தீ வைக்கப்பட்டது.

சிறிது நேரத்தில் அந்த குப்பை பயங்கர சத்தத்துடன் வெடித்தது. விசாரணையில் ஊருணியில் பட்டாசு கழிவுகள் கொட்டப்பட்டது தெரியவந்தது. அதிர்ஷ்டவசமாக மக்கள் யாரும் இல்லாததால் வேறு அசம்பாவிதம் ஏற்படவில்லை. அதே சமயத்தில் நீர் நிலைகளில் பட்டாசு கழிவுகள் கொட்டப்படுவதால் தண்ணீர் மாசுபடுகின்றது

கடந்த காலங்களிலும் இதுபோன்று பட்டாசு கழிவுகளால் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. சிறுவர்கள் விளையாட்டுத்தனமாக இதில் தீயிட்டு பலமுறை காயம் அடைந்துள்ளனர்.

பட்டாசு ஆலையின் வளாகத்திற்குள் பாதுகாப்பாக தீயிட்டு எரிக்க வேண்டும் என விதிமுறை இருந்தும் இந்த விதி மீறப்படுவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றது. தற்போது அதிக ஆட்கள் வைத்து மரத்தடியில் பட்டாசு தயாரிப்பது உள்ளிட்ட விதி மீறல்களை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதேபோல் பட்டாசு கழிவுகள் பாதுகாப்பாக எரிப்பது குறித்தும் கண்காணிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us