Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/அரசு டிரைவர், கண்டக்டர் தினக்கூலி பணியாளர்களாக தாரை வார்ப்பு: இனி தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தத்தில் நியமனம்

அரசு டிரைவர், கண்டக்டர் தினக்கூலி பணியாளர்களாக தாரை வார்ப்பு: இனி தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தத்தில் நியமனம்

அரசு டிரைவர், கண்டக்டர் தினக்கூலி பணியாளர்களாக தாரை வார்ப்பு: இனி தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தத்தில் நியமனம்

அரசு டிரைவர், கண்டக்டர் தினக்கூலி பணியாளர்களாக தாரை வார்ப்பு: இனி தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தத்தில் நியமனம்

ADDED : ஜூன் 12, 2025 01:58 AM


Google News
Latest Tamil News
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட அரசு போக்குவரத்து கழகத்தில் தினக்கூலியில் 95 கண்டக்டர்கள், 23 டிரைவர்கள் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தத்தில் ஜூன் 16 முதல் நியமிக்கப்படவுள்ளனர். இவர்களிடம் முன்பணமாக தலா ரூ.20 ஆயிரம் பெறப்படுகிறது. இந்த நடவடிக்கைகள் தொழிற்சங்கத்தினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் அரசு போக்குவரத்து கழகத்தில் விருதுநகர், சாத்துார், அருப்புக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்துார், ராஜபாளையம் 1, ராஜபாளையம் 2, காரியாபட்டி, வத்திராயிருப்பு என மொத்தம் 9 பணிமனைகள் உள்ளது.

இங்குள்ள மொத்த பஸ்களின் எண்ணிக்கை 462, இவற்றில் வரையறுக்கப்பட்ட சேவைகளின் எண்ணிக்கை 418, மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 2430. இப்பணிமனைகளில் ஒவ்வொரு மாதமும் டிரைவர்கள், கண்டக்டர்கள், டெக்னீசியன்கள் தொடர்ந்து ஓய்வு பெற்று வருகின்றனர்.

இதனால் ஏற்படும் பற்றாக்குறையை சமாளிக்க அந்தந்த பணிமனை நிர்வாகங்கள் தினக்கூலி அடிப்படையில் டிரைவர், கண்டக்டர்களை நியமித்து தினசரி ஊதியமாக டிரைவருக்கு ரூ. 700 + படி, கண்டக்டருக்கு ரூ. 690 + படி சேர்த்து வழங்கி வந்தது.

ஆனால் தினக்கூலி பணியாளர்களை அனைத்து அரசு மண்டல போக்குவரத்து கழகங்களிலும் நேரடியாக தனியார் நிறுவனங்கள் மூலமாக நியமிக்கும் முயற்சி நடந்தது. இதனை எதிர்த்து தொழிற்சங்கங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை உத்தரவு பெற்றனர்.

இதையடுத்து தற்போது தினக்கூலியில் டிரைவர், கண்டக்டர்களாக பணிபுரிபவர்களை தனியார் நிறுவனத்தின் ஊழியர்களாக அந்தந்த பணிமனை நிர்வாகத்தின் உதவியோடு மாற்றும் வேலை ஒவ்வொரு மாவட்டம் வாரியாக நடக்கிறது. வட மாவட்டங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பே இந்த வேலை சத்தமில்லாமல் துவங்கிவிட்டது.

விருதுநகர் மாவட்ட அரசு போக்குவரத்து கழகத்தின் மூலமாக தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தின் படி ஜூன் 16 முதல் தினக்கூலி அடிப்படையில் 95 கண்டக்டர்கள், அருப்புக்கோட்டை 10, சிவகாசி 8, ராஜபாளையம் 1ல் 5 என மொத்தம் 23 டிரைவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

இதில் டிரைவருக்கு ரூ. 872, கண்டக்டருக்கு ரூ. 870 தினசரி ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஒவ்வொரு ஊழியரிடம் இருந்தும் தலா ரூ. 20 ஆயிரத்தை தனியார் ஒப்பந்த நிறுவனம் முன்பணமாக பெற திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் தொழிற்சங்கத்தினர் மத்தியில் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது.

அரசு வேலைக்காக காத்திருக்கும் படித்த இளைஞர்கள் நேரடியாக போக்குவரத்து கழகத்தில் தொடர்ந்து 240 நாட்கள் பணிபுரிந்தால் அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது.

ஆனால் அரசு போக்குவரத்து கழகத்தில் பணிநிரந்தரம் செய்யக்கூடாது என்பதற்காகவே தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலமாக பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். இந்த நடவடிக்கையை கைவிட்டு விட்டு அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களின் நலன் காக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us