ADDED : பிப் 12, 2024 04:33 AM
சிவகாசி: வெம்பக்கோட்டை ஒன்றியம் தாயில்பட்டியில் அரசு பள்ளி அருகே குப்பைகளை கொட்டி இருப்பதால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
வெம்பக்கோட்டை ஒன்றியம் தாயில்பட்டியில் இருந்து வி.துரைசாமிபுரம் வழியில் அரசு பள்ளி சுற்றுச்சுவர் உள்ளது. இதன் அருகே மெயின் ரோட்டில் வாறுகால் உள்ளது. இப்பகுதியில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை வாறுகாலில் கொட்டி எரிக்கின்றனர். இதிலிருந்து எழும்பும் புகை ரோட்டிற்கு வருவதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
மேலும் புகை அருகில் உள்ள பள்ளி வளாகத்திற்குள் சென்று விடுகின்றது. இதனால் பள்ளி மாணவர்கள் மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் அவதிப்படுகின்றனர். எனவே இங்கு குப்பைகள் கொட்டப்பட்டு எரிப்பதை தடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.