ADDED : செப் 12, 2025 04:07 AM
கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பம் அருகே, 'லிப்ட்' கொடுப்பது போல் நடித்து பெண்ணை தாக்கி நகை, பணத்தை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
நடுக்குப்பம், மேகாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி மனைவி தமிழரசி, 48; இவர் நேற்று காலை 5:30 மணியளவில், புதுச்சேரி மீன் மார்க்கெட்டிற்கு செல்ல, கோட்டக்குப்பம் ரவுண்டானா அருகில் பஸ் ஏற நின்றிருந்தார்.
அப்போது வெள்ளை நிற ஸ்கூட்டியில் வந்த மர்ம நபர் ஒருவர், தமிழரசியை மீன் மார்க்கெட்டில் இறக்கி விடுவதாக கூறி, அழைத்தார். அவரும் அதை நம்பி ஸ்கூட்டியில் ஏறி சென்றார்.
இ.சி.ஆரில், கோட்டக்குப்பம் புத்துக்கோவில் அருகில் சென்ற போதுஅந்த ஆசாமி, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில், வண்டியை நிறுத்தி தமிழரசியை அறைந்து கழுத்தில் இருந்த ஒரு கிராம் கம்மல், ரூ.1,500 பணத்தை பறித்து கொண்டு தப்பி சென்றார்.
இதனால் பதறி அவர் கூச்சலிட்டார். அங்கு பொதுமக்கள் வருவதற்குள் மர்ம நபர் தலைமறைவாகி விட்டார்.
இது குறித்து தமிழரசி, கோட்டக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.