Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மாவட்ட செயலர்கள், இடைத் தேர்தல் வேட்பாளரை அறிவித்து... தி.மு.க., அதிரடி; எதிர்பாத்திராத திருப்பங்களால் கட்சியினரிடையே பரபரப்பு

மாவட்ட செயலர்கள், இடைத் தேர்தல் வேட்பாளரை அறிவித்து... தி.மு.க., அதிரடி; எதிர்பாத்திராத திருப்பங்களால் கட்சியினரிடையே பரபரப்பு

மாவட்ட செயலர்கள், இடைத் தேர்தல் வேட்பாளரை அறிவித்து... தி.மு.க., அதிரடி; எதிர்பாத்திராத திருப்பங்களால் கட்சியினரிடையே பரபரப்பு

மாவட்ட செயலர்கள், இடைத் தேர்தல் வேட்பாளரை அறிவித்து... தி.மு.க., அதிரடி; எதிர்பாத்திராத திருப்பங்களால் கட்சியினரிடையே பரபரப்பு

ADDED : ஜூன் 12, 2024 11:55 PM


Google News
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் தி.மு.க., மாவட்ட செயலர்களை மாற்றியும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்பாளரையும் ஒரே நாளில் அறிவித்து, அந்த கட்சி தலைமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., செயலராக இருந்த, எம்.எல்.ஏ., புகழேந்தி உடல் நலக்குறைவால் கடந்த ஏப்.6ம் தேதி இறந்தார். இதனால், விக்கிரவாண்டி தொகுதியும், மாவட்ட செயலாளர் பதவியும் காலியானது. விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, லோக்சபா தேர்தலின்போது கடைசி கட்டமாக தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதனால், தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் பதவிக்கும் , விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கும், கட்சியில் தீவிர போட்டி நிலவி வந்தது. மாவட்ட செயலாளர் பதவியை கைப்பற்றுவதற்கு அமைச்சர் பொன்முடி தனது மகன் கவுதமசிகாமணியை முன்னிறுத்தி, தி.மு.க., மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்புகளை கவனிக்கும் பணிகளை மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் மற்றும் கவுதமசிகாமணியிடம் ஒப்படைத்தார்.

தேர்தல் நேர ஆலோசனை கூட்டங்களும், கவுதமசிகாமணி தலைமையில் நடந்தது. இதனிடையே அ.தி.மு.க.,விலிருந்து வந்த எம்.எல்.ஏ., லட்சுமணன், நீண்ட காலமாக மாவட்ட செயலாளர் பதவி வழங்க வேண்டும் என தி.மு.க., தலைமையிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார். இதனால், கட்சி நிகழ்வுகளில் அவர் புறக்கணிக்கப்பட்டாலும், மாவட்ட செயலாளர் பதவிக்கு சென்னையில் முகாமிட்டு தி.மு.க., தலைமையை வலியுறுத்தி வந்தார். இதனால் மாவட்ட செயலாளர் பதவிக்கு கடும் போட்டி நிலவியது.

இதனிடையே விக்கிரவாண்டி இடைத் தேர்தலுக்காக மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர் சிவா, முன்னாள் சேர்மன் ஜனகராஜ் உள்ளிட்டோர் சீட் கேட்டு வந்தனர்.

அமைச்சர் பொன்முடி, தனது ஆதரவாளரான மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரனை தயார்படுத்தி, சென்னையில் கட்சி தலைவர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, அவர் போட்டியிடுவதையும் வலியுறுத்தி வந்தார்.

இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் திடீரென அறிவித்தது. இதனையடுத்து, இடைத்தேர்தல் வேட்பாளரை தலைமை அறிவிக்கும் என கடந்த இரு தினங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. ஒருபுறம் மாவட்ட செயலாளர் பதவிக்கு அமைச்சர் பொன்முடி தனது மகன் கவுதமசிகாமணியுடனும், மறுபுரம் எம்.எல்.ஏ., லட்சுமணன் தரப்பும், இடைத்தேர்தல் வாய்ப்புக்காக ஜெயச்சந்திரன், அன்னியூர் சிவா தரப்பும் சென்னையில் முகாமிட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் 12:30 மணிக்கு, திடீரென விழுப்புரம் தி.மு.க., மாவட்ட பொறுப்பாளராக கவுதமசிகாமணியை தலைமை அறிவித்தது. கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

விழுப்புரம் தி.மு.க., நகர அலுவலகத்தில், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் தலைமையில் இனிப்பு வழங்கிவிட்டு அமர்ந்திருந்தனர். அப்போது திடீரென 1 மணிக்கு விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டார்.

இதனை டி.வி.யில் பார்த்த கட்சியினர் வியப்படைந்தனர். சீட் எதிர்பார்த்திருந்த ஜெயச்சந்திரன் சோகத்துடன் புறப்பட்டுச்சென்றார்.

அமைச்சர் பொன்முடி, தனது மகனை மாவட்ட செயலராக்குவதில் உறுதியாக இருந்ததால், தி.மு.க., தலைமை, அந்த பொறுப்புக்கு கவுதமசிகாமணியை நியமித்தது. அதே நேரத்தில், இடைத்தேர்தலுக்கு பொன்முடி வலியுறுத்தி வந்த ஜெயச்சந்திரனுக்கு பதிலாக, பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைச்சர் நேரு, கனிமொழி எம்.பி., உள்ளிட்டோர் ஆதரவுடன், கட்சியில் நீண்ட காலமாக சீட் கேட்டு, தீவிரமாக பணியாற்றி வரும் அன்னியூர் சிவாவுக்கு இடைத்தேர்தலில் வாய்ப்பு வழங்கி அறிவித்துள்ளது.

இதே போல், வடக்கு மாவட்ட செயலராக இருந்த அமைச்சர் மஸ்தான் மீது எழுந்த புகாரில், அவரிடமிருந்த மாவட்ட செயலர் பதவியை பறித்து, அவரது ஆதரவாளரான திண்டிவனம் டாக்டர் சேகருக்கு வழங்கி, தி.மு.க., தலைமை வழங்கியது. கட்சியினரே எதிர்பார்த்திராத இந்த அறிவிப்புகள், விழுப்புரம் மாவட்ட தி.மு.க., வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us