Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ புதுச்சேரி சாராயம் குடித்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதி

புதுச்சேரி சாராயம் குடித்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதி

புதுச்சேரி சாராயம் குடித்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதி

புதுச்சேரி சாராயம் குடித்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதி

ADDED : ஜூலை 09, 2024 07:55 PM


Google News
விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி அருகே, புதுச்சேரி சாராயத்தை குடித்த, ஆறு பேர் ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி தொகுதியை சேர்ந்த வேம்பி மதுரா பூரி குடிசை கிராமத்தை சேர்ந்தவர்கள் சக்திவேல், 52, பிரபு,35. கூலி தொழிலாளிகளான இவர்கள் நேற்று முன்தினம் மாலை, புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டிற்கு சென்றனர். புதுச்சேரி அரசு அனுமதியுடன் விற்கப்படும் சாராயத்தை அங்கிருந்து வாங்கி வந்த அவர்கள், தங்கள் ஊரைச் சேர்ந்த ராஜா, 37, சுரேஷ் பாபு, 36, பிரகாஷ், 38, காளிங்கராஜ், 47, ஆகியோருடன் சேர்ந்து குடித்தனர்.

இந்நிலையில், அன்று இரவு சக்திவேலு உள்ளிட்ட ஆறு பேருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனே, ஆறு பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சம்பவம் குறித்து கஞ்சனுார் போலீசார் வழக்கு பதிந்து, சிகிச்சை பெற்று வரும் சக்திவேல் உள்ளிட்ட ஆறு பேரிடம் விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் இறந்த சம்பவம் பரபரப்பு அடங்குவதற்குள், திருவெண்ணெய்நல்லுாரில் புதுச்சேரியில் இருந்து வாங்கி வந்த கள்ளச்சாராயத்தை குடித்த ஒருவர் இறந்தார். 2 பேர் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதியை சேர்ந்த, ஆறு பேர் புதுச்சேரியில் இருந்து வாங்கி வந்த சாராயத்தை குடித்து, உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us