ADDED : செப் 25, 2025 12:30 AM
விரிஞ்சிபுரம்:வேலுாரை அடுத்த மருதவள்ளிபாளையம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ், 38; கொத்தனார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் தேவி, 17, அணைக்கட்டு அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
இவர் கடந்த 12ம் தேதி இரவு, தன் வீட்டின் முன், விறகு அடுப்பில் வெந்நீர் போட்டுள்ளார். அப்போது விறகில் மண்ணெண்ணெயை ஊற்றியபோது எதிர்பாராத விதமாக அவரது ஆடையில் தீப்பிடித்தது. தீ மளமளவென உடல் முழுதும் பரவியது.
வலியால் அலறி துடித்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.