ADDED : ஜூன் 02, 2024 07:37 AM
வெண்ணந்துார், : வெண்ணந்துார், நடுப்பட்டியை சேர்ந்த பழனிவேல் மகன் கவுரிசங்கர். இரும்பு கடை நடத்தி வருகிறார். நேற்று, இவரது தோட்டத்தில் புதிதாக, 'செட்' அமைப்பதற்காக, 'வெல்டிங்' வேலை நடந்துகொண்டிருந்தது.
அப்போது வெல்டிங் தீப்பொறி பறந்து, அருகிலிருந்த சோளத்தட்டு போரில் பட்டு தீப்பிடித்தது. தீ மளமளவென பரவி எரிய தொடங்கியது. அக்கம் பக்கத்தினர் சேர்ந்து தீயை அணைக்க முயன்றனர். தீயை அணைக்க முடியாததால், ராசிபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நிலைய அலுவலர் பலகார ராமசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்துக்கு வந்து, தீயை அணைத்தனர். இருந்தும், 30,000 ரூபாய் மதிப்புள்ள சோளத்தட்டுகள் எரிந்து நாசமாகின. வெண்ணந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.