Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ தி.மு.க., - எம்.எல்.ஏ., கல்லுாரியில் மாணவி துாக்கிட்டு தற்கொலை

தி.மு.க., - எம்.எல்.ஏ., கல்லுாரியில் மாணவி துாக்கிட்டு தற்கொலை

தி.மு.க., - எம்.எல்.ஏ., கல்லுாரியில் மாணவி துாக்கிட்டு தற்கொலை

தி.மு.க., - எம்.எல்.ஏ., கல்லுாரியில் மாணவி துாக்கிட்டு தற்கொலை

ADDED : ஜூன் 25, 2024 10:42 PM


Google News
திருச்சி : சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை சேர்ந்தவர் பாலாஜி. அ.ம.மு.க., நகர செயலர். இவரது மகள் தாரணி, 19. திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் கல்லுாரி விடுதியில் தங்கி, பி.இ., முதலாமாண்டு படித்து வந்தார்.

கடந்த, 23ம் தேதி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர், கல்லுாரி வளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மேலும், தந்தையை மொபைல் போனில் அழைத்து, தன்னை அழைத்து செல்ல வருமாறு கூறினார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, தாரணியின் அறை திறக்கப்படாததால், சக மாணவியர் சென்று பார்த்தபோது, அவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

இந்நிலையில், மகளை பார்க்க பாலாஜி கல்லுாரிக்கு வந்த போது, தாரணி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரது உடல் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

அங்கு வந்த பாலாஜியும், அவரது உறவினர்களும், தாரணி உடலை பார்த்து கதறினர்.

தன் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக, சமயபுரம் போலீசில் பாலாஜி புகார் அளித்தார். மேலும், தி.மு.க., - எம்.எல்.ஏ., கதிரவனுக்கு சொந்தமான கல்லுாரி என்பதால், போலீசார் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாக புகார் கூறினார்.

போலீசார் சந்தேக மரணம் என்று வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாரணியின் உடல், திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, நேற்று மாலை, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பெற்றோர் கோரிக்கைப்படி, பிரேத பரிசோதனை முழுதும் வீடியோ எடுக்கப்பட்டது.

கல்லுாரி தரப்பு விளக்கம்

தனலட்சுமி சீனிவாசன் கல்லுாரி தரப்பில் கேட்டபோது, 'மாணவிக்கு கல்லுாரியில் எந்த பிரச்னையும் இல்லை. உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, ஓய்வு எடுத்தார். அவருக்கு வேறு பிரச்னையால் தற்கொலை செய்து கொண்டாரா என்று போலீசார் தான் விசாரித்து கூற வேண்டும்' என்றனர்.
சமயபுரம் போலீசார் கூறுகையில், 'பிரேத பரிசோதனைக்கு பிறகே என்ன நடந்தது என்று தெரிய வரும். மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரில், சந்தேக மரணம் வழக்கு பதிவு செய்துள்ளோம்' என்றனர்.



தினகரன் கண்டனம்

தாரணியின் தற்கொலைக்கு, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இவ்விஷயத்தில் கல்லுாரி நிர்வாகத்தின் செயல்பாடும் சந்தேகம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதால், போலீசார் உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us