Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ குண்டு மிரட்டல் 'இ-மெயில்' எங்கிருந்து அனுப்பப்பட்டது?

குண்டு மிரட்டல் 'இ-மெயில்' எங்கிருந்து அனுப்பப்பட்டது?

குண்டு மிரட்டல் 'இ-மெயில்' எங்கிருந்து அனுப்பப்பட்டது?

குண்டு மிரட்டல் 'இ-மெயில்' எங்கிருந்து அனுப்பப்பட்டது?

ADDED : செப் 01, 2025 12:24 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்; கடந்த 28ம் தேதி திருப்பூர் கலெக்டரின் அதிகாரப்பூர்வ இ-மெயிலுக்கு வந்த கடிதத்தில், ''கலெக்டர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி அலுவலகத்தில் வெடிகுண்டு வெடிக்கும்'' என குறிப்பிடப்பட்டிருந்தது. சோதனையில் இது புரளி என தெரிய வந்தது.

போலீசார் கூறியதாவது:

கோவை, திருப்பூர், நீலகிரியில் உள்ள கலெக்டர் அலுவலகம், கோர்ட், பாஸ்போர்ட் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. பலத்த சோதனையில், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட 'வெடிகுண்டு மிரட்டல்' இ-மெயிலில், 'மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாப் இறப்புக்கு பழி வாங்கும் நடவடிக்கை' என குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் பின்னணியில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. முதல் கட்டமாக, அந்த மெயில், ரஷ்யாவில் இ-மெயில் சேவைகளுக்கு பயன்படுத்தப்படும், யான்டெக்ஸ் மெயில் சர்வரில் இருந்து வந்துள்ளது. இதை டார்க் வெப்சைட் மூலம், வி.பி.என்., போன்ற செயலிகளைப் பயன்படுத்தி அனுப்பியிருக்க வாய்ப்புள்ளது. யார் அனுப்பினர்கள் என்பதை கண்டறிய, யான்டெக்ஸ் மெயில் சேவை நிறுவனத்துக்கு, இ-மெயில் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இரு வாரங்களுக்குள், அங்கிருந்து இதற்கான விவரங்கள் கிடைக்கும். அந்நாட்டு சர்வரை பயன்படுத்தி, இங்குள்ள நபர்கள், இவ்வாறு மிரட்டல் கடிதம் அனுப்பினரா என்பது குறித்து விசாரணை முடிவில் தெரியும். மாநகர போலீசார் மட்டுமல்லாமல், தீவிரவாத தடுப்பு பிரிவு, மத்திய உளவு பிரிவு அமைப்பினரும் விசாரித்து வருகின்றனர்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது. ரஷ்யாவின் இ - மெயில் சேவைகளுக்கு பயன்படும் சர்வரில் இருந்து அனுப்பப்பட்டுள்ளதால், 'இ மெயில்' அனுப்பிய நபர் குறித்த விவரங்களை அறிவதற்காக, அந்நாட்டு நிறுவனத்திடம் உதவி கோரப்பட்டுள்ளது. அந்த விபரங்கள் வந்த பின், எங்கிருந்து அனுப்பினர், யார் போன்ற விபரம் தெரிய வரும். - ராஜேந்திரன், போலீஸ் கமிஷனர், திருப்பூர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us