Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மதிப்பு கூட்டப்படும் சிறு தானியம் வருவாய் பெருகும்: வேளாண் அதிகாரி அறிவுரை

மதிப்பு கூட்டப்படும் சிறு தானியம் வருவாய் பெருகும்: வேளாண் அதிகாரி அறிவுரை

மதிப்பு கூட்டப்படும் சிறு தானியம் வருவாய் பெருகும்: வேளாண் அதிகாரி அறிவுரை

மதிப்பு கூட்டப்படும் சிறு தானியம் வருவாய் பெருகும்: வேளாண் அதிகாரி அறிவுரை

ADDED : செப் 12, 2025 10:43 PM


Google News
திருப்பூர்; ''மதிப்புக்கூட்டப்பட்டு சந்தைப்படுத்தப்படும் சிறு தானியங்களால், வருவாய் பெருகும்'' என, வேளாண் இணை இயக்குனர் தெரிவித்தார்.

கடந்த, 2023 முதல், தமிழகம் முழுதும், பல்வேறு மாவட்டங்களில், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சிறுதானியங்களை பதப்படுத்தி, மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்த வழிவகை ஏற்படுத்தும் நோக்கில், பதப்படுத்தும் இயந்திரங்கள் வாங்க, வங்கிகள் வாயிலாக, 25 லட்சம் ரூபாய் வரை கடன் பெறவும், அதற்கான பின்னேற்பு மானியமாக, 18.75 லட்சம் ரூபாய் பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், கிராமப்புற இளைஞர்கள், வேளாண் தொழில் முனைவோர், வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி பயனாளிகள் ஆகியோர், இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற தகுதியுடையவர்கள் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

தானியம் சுத்தம் செய்யும் இயந்திரம், கல் மற்றும் துாசி நீக்கும் இயந்திரம், தோல் நீக்கும் இயந்திரம், மாவு அரைக்கும் இயந்திரம், தானியத்தை நிறம் பார்த்து பிரிக்கும் இயந்திரம், தானிய மெருகூட்டும் இயந்திரம், சிப்பமிடும் இயந்திரம், எடையிடும் இயந்திரம் மற்றும் சாக்கு தைக்கும் இயந்திரம் போன்ற, முதன்மை பதப்படுத்தும் இயந்திரங்கள் அனைத்தும், அல்லது தேவைகளின் அடிப்படையில் தனிப்பட்ட இயந்திரங்களை பெற முடியும்.

திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி, மாவட்ட அளவிலான குழு பரிந்துரை அடிப்படையில் மானிய தொகை, அனைத்து இயந்திரங்களும் நிறுவப்பட்ட பின், 60 சதவீதம் வழங்கப்படும்.

சிறுதானிய மதிப்புக்கூட்டு பொருள் உற்பத்தி திறன் அடிப்படையில், 40 சதவீதம் என, இரு தவணைகளில், பயனாளிகளின் வங்கிக்கணக்கில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறையினரால் விடுவிக்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட அவிநாசி, புஞ்சை தாமரைக்குளம் மற்றும் நடுவச்சேரி கிராமங்களைச் சேர்ந்த இரு பயனாளிகள்; வெள்ளகோவில், முத்துார் கிராமத்தைச் சேர்ந்த பயனாளிகள் அமைத்துள்ள சிறுதானிய முதன்மை பதப்படுத்தும் மையங்களை வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) வெங்கடாச்சலம் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

சிறுதானியங்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துதல் குறித்த ஆலோசனையையும் வழங்கினார். ஆய்வின் போது, வேளாண்மை அலுவலர், வேளாண் உதவி அலுவலர், வேளாண்மை பொறியியல் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us