ADDED : ஜூன் 04, 2025 08:30 PM
உடுமலையில், தாலுகா அலுவலகம், அரசு மருத்துவமனை, பள்ளி சுவர்கள், பஸ் ஸ்டாண்ட் என மக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதிகள், போஸ்டர்கள் ஒட்டும் இடமாக மாறி வருகிறது.
அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களும் விளம்பரங்களை ஒட்டி வருவதால், அரசு சுவர்கள் அலங்கோலமாக இருக்கின்றன.
பழநி ரோடு, தாரா புரம் ரோடு, பொள்ளாச்சி ரோடுகளின் மையத்தடுப்புகள் மற்றும் வழிகாட்டி பலகைகள், மேம்பாலம் என அனைத்து இடங்களும் போஸ்டர் மயமாக இருக்கிறது.
பொது இடங்களில் பிளக்ஸ், பேனர்கள் வைக்க, கட்டுப்பாடு விதித்து அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் இருந்தும், அத்துமீறி வைக்கின்றனர்.
நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டால், 'அரசு சுவர்கள், மையத்தடுப்புகளில் போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது, நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை மற்றும் போலீசார் ஒருங்கிணைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர். ஆனால், இதுவரை யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை.
கிராமங்களும் தப்பவில்லை
குடிமங்கலம், கொங்கல்நகரம், பெதப்பம்பட்டி, மூங்கில்தொழுவு நால்ரோடுகளில், விதிகளை மீறி, போக்குவரத்துக்கு இடையூறாக பேனர்கள் வைக்கின்றனர்.
குடிமங்கலம் பி.டி.ஓ., சுப்ரமணியம் கூறுகையில், ''கிராமப்புறங்களில், பிளக்ஸ் பேனர்கள் வைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி பெற்று ஊராட்சி நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அனுமதியின்றியும், விதிமுறை மீறியும் வைக்கப்படும் பேனர்களை அகற்ற, சம்பந்தப்பட்ட ஊராட்சிகளுக்கு அறிவுறுத்தப்படும்,'' என்றார்.