/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ போலீசார் திடீர் சோதனை; குற்றம் தவிர்க்க 'அலர்ட்' போலீசார் திடீர் சோதனை; குற்றம் தவிர்க்க 'அலர்ட்'
போலீசார் திடீர் சோதனை; குற்றம் தவிர்க்க 'அலர்ட்'
போலீசார் திடீர் சோதனை; குற்றம் தவிர்க்க 'அலர்ட்'
போலீசார் திடீர் சோதனை; குற்றம் தவிர்க்க 'அலர்ட்'
ADDED : ஜூன் 09, 2025 12:23 AM

திருப்பூர்; திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில், போலீஸ் படையினர் திடீர் சோதனை நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
நேற்று காலை, திருப்பூர் தெற்கு உதவி கமிஷனர் ஜான் தலைமையில், தெற்கு இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார், அதிரடிப் படையினர் என, 100 பேர் அடங்கிய போலீஸ் படை, மத்திய பஸ் ஸ்டாண்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
வாகனங்கள் மற்றும் வெளியூரில் இருந்து வரும் வட மாநிலத்தவர் என, சோதனை நடத்தப்பட்டது. சந்தேகத்திற்குரிய நபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர்களது பின்னணி உள்ளிட்ட விவரங்களையும் சேகரித்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஏன் சோதனை!
தொழில் நகரமாக உள்ள திருப்பூரில், பிற மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் பல்வேறு பணி நிமித்தமாக பலரும் வருகின்றனர். ஏற்றுமதி வர்த்தக நகரம் என்பதால், வெளிநாட்டினரும் வந்து செல்கின்றனர். பலதரப்பட்ட மனிதர்கள் புழங்குவதால் குற்றச் செயல்களும் அவ்வப்போது நடக்கிறது.
நகரப்பகுதியில், உள்ள மதுக்கடை பார்கள் பலவும், 24 மணி நேரமும் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன; கஞ்சா பொருள் புழக்கமும் அதிகரித்துள்ளது.
நகர மற்றும் ஊரக பகுதிகளில் நடக்கும் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்களை கண்டுபிடிப்பது, போலீசாருக்கு சிரமமான காரியமாக உள்ளது. எனவே, போலீசாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் நகரை கொண்டு வருவதில் போலீசார் கவனம் செலுத்துகின்றனர்.
புகையிலை புழக்கம்
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பயன்பாடும் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. புகையிலைக்கு, தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ள காரணத்தால், ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்க்கு விற்பனை செய்த புகையிலை பாக்கெட்டுகள், 10 ரூபாய் முதல், 50 ரூபாய் வரை விற்கப்படுகின்றன.
இதனால், வெளி மாநிலம் சென்று திரும்பும் பலர் தங்களால் இயன்றளவில் புகையிலைப் பொருட்களை ரகசியமாக கொண்டு வந்து, விற்பனை செய்து, பணம் ஈட்டுகின்றனர்.
பஸ் ஸ்டாண்ட் மற்றும் ரயில்வே ஸ்டேஷன் பகுதிகளில், போலீசாரின் தொடர் ஆய்வில், இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோரை போலீசார் பிடித்து சிறையில் அடைக்கின்றனர்.