/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/உடுமலை அரசு கல்லூரியில் உருவாகும்: அடர் வனம் வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் மரக்கன்று நடவுஉடுமலை அரசு கல்லூரியில் உருவாகும்: அடர் வனம் வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் மரக்கன்று நடவு
உடுமலை அரசு கல்லூரியில் உருவாகும்: அடர் வனம் வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் மரக்கன்று நடவு
உடுமலை அரசு கல்லூரியில் உருவாகும்: அடர் வனம் வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் மரக்கன்று நடவு
உடுமலை அரசு கல்லூரியில் உருவாகும்: அடர் வனம் வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் மரக்கன்று நடவு
ADDED : ஜன 11, 2024 10:45 PM

உடுமலை;உடுமலை அரசு கல்லுாரியில், வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் கீழ், அடர் வனம் உருவாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
உடுமலை அரசு கலைக்கல்லுாரி வளாகத்தில், வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் கீழ், அடர் வனம் உருவாக்கும் வகையில், 'மியாவாகி' முறையில், 1,245 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.
இம்முறையில், ஒரு குறிப்பிட்ட பரப்பளவில், மண், தாவரக்கழிவுகள், இயற்கை உரம் ஆகியவற்றைக்கொண்டு, அதிகளவு மரக்கன்றுகள் நடவு செய்யப்படுகிறது. இதன் வாயிலாக, மரக்கன்றுகள் ஒன்றுக்கு ஒன்று போட்டி, போட்டு வளர்வதோடு, நீர்த்தேவை குறைகிறது.
மேலும், நெருக்கமாக மரங்கள் வளரும் போது, அவற்றின் இலைகள் மண்ணில் விழுந்து உரமாக மாறுவதோடு, ஈரப்பதமும் மண்ணில் நிரந்தரமாக காணப்படும்.
மியாவாகி முறையில், 100 புங்கன் மரக்கன்றுகள், 100 வேம்பு, 100 தான்றி, 100 நீர் மருது, 100 மந்தாரை, 85 நாவல், 65 துாங்கு வாகை, 100 கொன்னை, 100 சொர்க்கம், 75 கொடுக்காப்புளி, 100 பூவரசன், 50 பாதாம், 50 இலுப்பை, 100 ஆயன், 10 மாதுளை, 10 பலா என, 1,245 மரக்கன்றுகள், அரசு கல்லுாரி வளாகத்தில் நடவு செய்து, அடர் வனம் உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மரங்கள் வளர்ந்து அடர் வனம் உருவாகும் போது, பசுமை மட்டுமின்றி, நுண்ணுயிரினங்கள், பறவைகள் உள்ளிட்ட பல்லுயிரினங்கள் பெருக்கத்திற்கு ஆதாரமாக இருக்கும்.
மரக்கன்றுகள் நடும் விழாவில், அரசுக்கல்லுாரி முதல்வர், கம்ப்யூட்டர் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
அதே போல், கொடிங்கியம், ஆர்.கே.ஆர்., ஞானோதயா மெட்ரிக் பள்ளியில், புங்கன், பாதாம், கொடுக்காப்புளி, பூவரசன், சொர்க்கம், ஆயன், மந்தாரை, குமிழ், நீர் மருது, கொன்னை, மூங்கில், தான்றி, நாவல், இலுப்பை, நாட்டு வாகை என மண்ணின் மரபு சார்ந்த, 240 மரக்கன்றுகள் வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் கீழ் நடவு செய்யப்பட்டது.
மானாவாரி நிலங்களில் மரச்சாகுபடி திட்டமாக, தாசர்பட்டியை சேர்ந்த, சாரதா- முத்துக்கிருஷ்ணன் ஆகியோருக்கு சொந்தமான விவசாய நிலத்தில், வேங்கை, காயா, மகா கனி, கருங்காலி என, 240 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான நிலங்கள், பள்ளி, கல்லுாரிகள், கோவில் நிலங்கள் மற்றும் விவசாய நிலங்களில், இலவசமாக மரக்கன்றுகள் நடவு செய்து தரப்படுகிறது.
மரக்கன்றுகள் நடவு செய்து, பராமரிக்க விருப்பம் உள்ளவர்கள், 90474 56666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என திட்டக்குழுவினர் தெரிவித்தனர்.