Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'மோனோகுரோட்டோபாஸ்' வேண்டாம்! தென்னை விவசாயிகளுக்கு 'அட்வைஸ்'

'மோனோகுரோட்டோபாஸ்' வேண்டாம்! தென்னை விவசாயிகளுக்கு 'அட்வைஸ்'

'மோனோகுரோட்டோபாஸ்' வேண்டாம்! தென்னை விவசாயிகளுக்கு 'அட்வைஸ்'

'மோனோகுரோட்டோபாஸ்' வேண்டாம்! தென்னை விவசாயிகளுக்கு 'அட்வைஸ்'

ADDED : மே 24, 2025 05:56 AM


Google News
Latest Tamil News
பொங்கலுார் : மாவட்ட அளவிலான தென்னை மற்றும் காய்கறி பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்கு பொங்க லுாரில் நடைபெற்றது.

தென்னை மற்றும் காய்கறி பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த கருத்தரங்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் பொங்கலுார் ஸ்ரீ சிவா மஹாலில் நடந்தது. அமைச்சர் சாமிநாதன் கருத்தரங்கைத் துவக்கி வைத்தார்.

கருத்தரங்கில் காய்கறிகள், தென்னை, வாழை உள்ளிட்ட நாற்றுகள், வேளாண் கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. தென்னை சாகுபடி விவசாயிகளுக்கான கையேடு வழங்கப்பட்டது.

இதில், தமிழ்நாடு வேளாண் பல்கலை முன்னாள் பேராசிரியர் ராஜமாணிக்கம் பேசியதாவது:

தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் தேங்காய் பாலில் உள்ளது. தென்னை கற்கண்டு சாப்பிட்டால் சுகர் ஏறாது. தேங்காய் எண்ணெய் பின் விளைவு இல்லாதது. இதில் கொலஸ்ட்ரால் உள்ளதாக கூறுவது தவறு. இதை அனைவரும் பயப்படாமல் பயன்படுத்தலாம்.

தென்னைக்கு பரிந்துரை அளவைவிட தழைச்சத்து (யூரியா) இடக்கூடாது. கோழி எருவை மக்க வைக்காமல் மரத்திற்கு கொட்டுவது சொந்தக் காசில் சூனியம் வைப்பதற்குச் சமம்.

நோய் வந்துவிட்டால் மோனோகுரோ ட்டோபாஸை தயவுசெய்து கொடுக்காதீர். தென்னையில் தஞ்சாவூர் வாடல் நோய், குருத்தழுகல் நோய், சுருள் வெள்ளை ஈ தாக்குதல், சாம்பல் இலைப்புள்ளி நோய், காண்டாமிருக வண்டு, கருந்தலைப்புழு, சிவப்பு கூன் வண்டு, ஈரியோ பைட் தாக்குதல் உள்ளிட்டவை தாக்கி சேதம் ஏற்படுத்துகிறது.

விவசாயிகள் நோய் பாதித்த மரங்களுக்கு நுண்ணுாட்டச்சத்து, வேப்பம் புண்ணாக்கு, தொழு உரம் போன்றவற்றை இட வேண்டும். ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கடைப்பிடித்தும், இனக்கவர்ச்சி பொறி, விளக்கு பொறி, ஒட்டுப்பொறி போன்றவற்றை பயன்படுத்தியும் பூச்சி, நோய் தாக்குதலை கட்டுப்படுத்தலாம் என்றார்.

விவசாயிகளிடம் ஆர்வம் இல்லை

தென்னையில் நோய் தாக்குதல் காரணமாக விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தேங்காய் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. நோயை கட்டுப்படுத்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும், விவசாய அமைப்புகளும் வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில், நேற்று பொங்கலுாரில் நடந்த மாவட்ட அளவிலான கருத்தரங்கில் சொற்ப அளவிலான விவசாயிகளே கலந்து கொண்டனர். அமைச்சர் சாமிநாதன் வந்தபோது அமைச்சரின் ஆதரவாளர்களும், உள்ளாட்சி, தோட்டக்கலை துறை, வேளாண் துறை உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகளும் பெருமளவில் கலந்து கொண்டனர். அரசு அதிகாரிகளின் வாகனங்களே மண்டபத்தை ஆக்கிரமித்து இருந்தன. அமைச்சர் சென்ற பின் பலரும் கலைந்து சென்றனர். பெரும்பாலான சேர்கள் காலியாக கிடந்தன.

தென்னை விவசாயிகளுக்காகவே நடத்தப்பட்ட கருத்தரங்கை விவசாயிகள் கண்டுகொள்ளா மல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us