/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/கனிமவள கடத்தல் அபாரம்...: இரண்டு மாவட்ட எல்லையில் 'அமோகம்!' கனிமவள கடத்தல் அபாரம்...: இரண்டு மாவட்ட எல்லையில் 'அமோகம்!'
கனிமவள கடத்தல் அபாரம்...: இரண்டு மாவட்ட எல்லையில் 'அமோகம்!'
கனிமவள கடத்தல் அபாரம்...: இரண்டு மாவட்ட எல்லையில் 'அமோகம்!'
கனிமவள கடத்தல் அபாரம்...: இரண்டு மாவட்ட எல்லையில் 'அமோகம்!'
ADDED : ஜூன் 15, 2024 06:00 PM

பல்லடம்: அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக, திருப்பூர் - கோவை மாவட்ட எல்லையில், கனிமவள கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இயற்கை வளங்களை அழியாமல் பாதுகாக்க வருவாய் துறை, கனிமவளத் துறை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகள் உள்ளன. ஆனால், அரசியல் செல்வாக்கு, அதிகாரிகளின் ஆதரவு உள்ளிட்ட காரணங்களால், இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.
இவ்வாறு, கனிமவளங்களை திருடி கடத்தும் கும்பல் தமிழகம் முழுவதும் பரவலாக செயல்படுகிறது. குறிப்பாக, திருப்பூர் கோவை மாவட்ட எல்லை பகுதியில், கனிமவள கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், பல்லடம் உட்கோட்ட எல்லை பகுதியாக காமநாயக்கன்பாளையம், கரடிவாவி மற்றும் கோவை மாவட்ட எல்லை பகுதிகளாக சுல்தான்பேட்டை, செலக்கரிச்சல் ஆகியவற்றில், கனிம வள கடத்தல் அபாரமாக நடந்து வருகிறது. காலியாக உள்ள தரிசு நிலங்களில, ஏற்கனவே உள்ள குளம் குட்டைகள், நீரோடைகள் மற்றும் காற்றாலையை ஒட்டியுள்ள காலி நிலங்கள் உள்ளிட்டவள்றை பயன்படுத்தி கனிம வள கடத்தல் நடந்து வருகிறது.
கிராமம் வழியே மண் கடத்தல்
மாவட்ட எல்லையில் வனப்பரப்பு அதிகம் உள்ளதாலும், வாகன போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் ஆகியன பெரிய அளவு இல்லாததாலும், இதனை சாதகமாக்கும் கனிமவள கடத்தல் கும்பல்கள், சுற்றி வளைத்து கனிமவள கடத்தலில் ஈடுபட்டு வருகின்றன.
இரண்டு மாவட்ட எல்லை பகுதியில் நடந்து வரும் கனிமவள கடத்தலுக்கு சில அதிகாரிகளும் துணை போகின்றனர். சோதனை சாவடிகளில் சிக்காமல் இருக்க, பல்வேறு கிராமச் சாலைகளை பயன்படுத்தும் கனிமவள கடத்தல் கும்பல், சில அதிகாரிகளின் ஆதரவுடன், 'மண்ணை பொன்னாக்கும்' செயலில் கச்சிதமாக ஈடுபட்டு வருகின்றன. மாவட்ட எல்லைகளில் உள்ள கிராமங்களை ஆய்வு செய்தால், எண்ணற்ற இடங்களில், கனிமவள கடத்தலில் ஈடுபட்டதற்கான சான்றுகள் புலப்படும்.
இரண்டு மாவட்டங்களுக்குமான எல்லை பகுதி என்பதால், அதிகாரிகளும் சொல்லும்படியாக கண்காணிப்பு மேற்கொள்வதில்லை. இதனால், கனிமவள கடத்தல் பல ஆண்டுகளாக தங்குதடையின்றி நடந்து வருகிறது. இதேபோல் கனிமவளங்களை சுரண்டி எடுத்துக் கொண்டே சென்றால், இப்பகுதியில் பூகம்பம் கூட வரலாம்.
எனவே, கனிமவள கடத்தலை தடுக்க, மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். கொள்ளை போன கனிம வளங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு உரிய விசாரணையை நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கிராமச் சாலைகளை பயன்படுத்தும் கனிமவள கடத்தல் கும்பல், சில அதிகாரிகளின் ஆதரவுடன், மண்ணை பொன்னாக்கும் செயலில் கச்சிதமாக ஈடுபட்டு வருகின்றன