ADDED : ஜன 08, 2025 12:32 AM

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில், தையல் மெஷினுக்காக, 240 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு நேர்காணல் நடத்தி, பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுவருகின்றனர்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், தையல் மெஷினுக்கான பயனாளிகள் தேர்வு, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த் ராம்குமார் தலைமை வகித்தார். மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் உறவினர்கள், 90 பேர் பங்கேற்றனர். தையல் மெஷின் வைக்கப்பட்டு, நுால் கோர்க்க தெரிகிறதா, தையல் பழகியுள்ளனரா என பரிசோதிக்கப்பட்டது. இன்று காலை, 10:00 மணிக்கு, இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டருக்கான பயனாளிகள் தேர்வு நடைபெற உள்ளது.