/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/உலர் தீவனம் இருப்பு வைக்க ஆர்வம்: மானாவாரியில் அறுவடை துவக்கம்உலர் தீவனம் இருப்பு வைக்க ஆர்வம்: மானாவாரியில் அறுவடை துவக்கம்
உலர் தீவனம் இருப்பு வைக்க ஆர்வம்: மானாவாரியில் அறுவடை துவக்கம்
உலர் தீவனம் இருப்பு வைக்க ஆர்வம்: மானாவாரியில் அறுவடை துவக்கம்
உலர் தீவனம் இருப்பு வைக்க ஆர்வம்: மானாவாரியில் அறுவடை துவக்கம்
ADDED : பிப் 09, 2024 11:36 PM
உடுமலை:உலர் தீவனத்துக்கு தட்டுப்பாடு நிலவுவதால், மக்காச்சோளம் மற்றும் சோளத்தட்டை வாங்கி இருப்பு வைக்க, கால்நடை வளர்ப்போர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உடுமலை சுற்றுப்பகுதிகளில், பால் உற்பத்திக்காக, மாடுகள் அதிகளவு பராமரிக்கப்படுகிறது. கால்நடை வளர்ப்போர் பசுந்தீவனம் உற்பத்தி செய்து, மாடுகளுக்கு வழங்குகின்றனர்.
மேலும், உலர் தீவனமும் குறிப்பிட்ட சதவீதம் கால்நடைகளுக்கு வழங்கப்படுகிறது. வைக்கோல், மக்காச்சோளம் மற்றும் சோளத்தட்டு அதிகளவு உலர் தீவனமாக பயன்படுத்தப்படுகிறது.
எனவே, வடகிழக்கு பருவமழை சீசனில், மானாவாரியாக சோளம் மற்றும் மக்காச்சோளம் விதைப்பு செய்வார்கள். கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை போதியளவு பெய்யாததால், மானாவாரி விதைப்பு வெகுவாக குறைந்தது.
சில பகுதிகளில், மானாவாரியாக விதைப்பு செய்யப்பட்ட சோளம் மற்றும் மக்காச்சோளம் அறுவடை பணிகள் துவங்கியுள்ளது. இந்த சீசனில், உலர் தீவன தேவைக்காக மக்காச்சோள தட்டுகளை வாங்கி இருப்பு வைக்க துவங்கியுள்ளனர்.
கால்நடை வளர்ப்போர் கூறியதாவது: பால் உற்பத்திக்காக பராமரிக்கப்படும் மாடுகளுக்கு வழங்கப்படும் புண்ணாக்கு, மக்காச்சோள மாவு ஆகியவற்றின் விலை, பல மடங்கு உயர்ந்து விட்டது.
உலர் தீவனம் மட்டுமே பால் உற்பத்தி குறையாமல், இருக்க பயன்படுகிறது. நெல் சாகுபடியில் அறுவடை துவங்காததால், வைக்கோல் வரத்து குறைவாகவே உள்ளது.
தற்போது மக்காச்சோளம் மற்றும் சோளத்தட்டை வாங்கி இருப்பு வைக்கிறோம். தமிழக அரசு கால்நடைத்துறை வாயிலாக, உலர் தீவன கிடங்கு திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.
இதனால், குறைந்த விலையில், அனைத்து பகுதிகளிலும், உலர் தீவனம் கிடைக்கும். இது குறித்து தொடர் கோரிக்கை விடுத்து வருகிறோம். இவ்வாறு, தெரிவித்தனர்.