Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ உறைவிடப்பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு; அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

உறைவிடப்பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு; அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

உறைவிடப்பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு; அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

உறைவிடப்பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு; அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

ADDED : ஜூன் 19, 2025 07:54 AM


Google News
உடுமலை: பழங்குடியினர் நலத்துறை உண்டு உறைவிட துவக்கப்பள்ளி மாணவர்களுக்கான, நிதிஒதுக்கீடு குறைவாக இருப்பதால், உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது.

மலைவாழ் பகுதி குழந்தைகளுக்கு, இடைநிற்றல் இல்லாமல் அடிப்படை கல்வி வழங்கும் வகையில், பழங்குடியினர் நலத்துறை உண்டு உறைவிட துவக்கப்பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் மொத்தமாக, 5 பழங்குடியினர் உண்டு உறைவிட துவக்கப்பள்ளிகள் உள்ளன. அனைத்துமே உடுமலை சுற்றுப்பகுதியில் மட்டுமே உள்ளது.

கரட்டூர், லிங்கமாவூர், திருமூர்த்திநகர், அமராவதி நகர், பெருமாள்புதுார் உள்ளிட்ட பகுதியில் இப்பள்ளிகள் அமைந்துள்ளன.

ஒரு தலைமையாசிரியர், ஆசிரியர் மற்றும் சமையலர், உதவியாளர் இப்பள்ளிகளுக்கு நியமிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு பள்ளியிலும் தலா அதிகபட்சம், 50 மாணவர்கள் வரை பராமரிக்கலாம்.

இப்பள்ளியில் தங்கும் மாணவர்களுக்கு, அவர்களுக்கான உணவு, சிற்றுண்டி தேவை மற்றும் சமைப்பதற்கான செலவினமாக ஒரு மாணவனுக்கு, 1,400 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

கடந்தாண்டுக்கு முன்பு வரை இந்த தொகை, 1,100 ரூபாயாக இருந்தது. கடந்தாண்டில் 300 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு காலை, மதியம், இரவு உணவு, காலை, மாலை சிற்றுண்டி, அசைவ உணவு வழங்குவதற்கும், இந்த தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்தாண்டுக்கு முன்பு வரை உணவு பட்டியலில் புதிதாக ஒன்றும் சேர்க்கப்பட வில்லை. ஆனால் கடந்தாண்டு, மாணவர்களுக்கு வழங்குவதற்கென புதிய உணவு பட்டியலும் வழங்கப்பட்டுள்ளது.

அதில் புதிதாக பூரி, நவதானிய தோசை, கிச்சடி, சேமியா, காய்கறி பிரியாணி, வரகு பொங்கல், கோதுமை தோசை என பலவிதமான உணவு வகைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இவ்வாறு வழங்குவதற்கு போதிய நிதிஒதுக்கீடு இல்லாததால் நலத்துறையின் உணவு பட்டியலை பின்பற்றுவதிலும் பள்ளிகளில் சிக்கல் ஏற்படுகிறது.

இப்பள்ளி பொறுப்பாளர்கள் கூறியதாவது: காய்கறி, இறைச்சி மற்றும் தானியம், மாவு வகைகள் என அனைத்துமே நாளுக்கு நாள் விலை நிலவரம் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. தற்போது வழங்கப்படும் நிதிஒதுக்கீட்டை விடவும் ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக 400 ரூபாய் வரை செலவாகிறது. அதில் அசைவ உணவுகளுக்கு, பெரும்பாலும் பள்ளி ஆசிரியர்களின் செலவில்தான் வாங்கி சமைத்து வழங்க வேண்டியுள்ளது. மாணவர்களுக்கான உணவு செலவினத்தொகையை அதிகரித்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us