Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நகராட்சி சந்தையில் கடைகள் கட்டுமான பணி இழுபறி பிரதான ரோடுகளில் போக்குவரத்து நெரிசல்

நகராட்சி சந்தையில் கடைகள் கட்டுமான பணி இழுபறி பிரதான ரோடுகளில் போக்குவரத்து நெரிசல்

நகராட்சி சந்தையில் கடைகள் கட்டுமான பணி இழுபறி பிரதான ரோடுகளில் போக்குவரத்து நெரிசல்

நகராட்சி சந்தையில் கடைகள் கட்டுமான பணி இழுபறி பிரதான ரோடுகளில் போக்குவரத்து நெரிசல்

ADDED : செப் 05, 2025 09:49 PM


Google News
Latest Tamil News
உடுமலை,; உடுமலை சந்தை வளாகத்தில், கடைகள் கட்டும் பணி இழுபறியாகி வரும் நிலையில், தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளதால், பிரதான ரோடுகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

உடுமலை நகராட்சி சந்தைக்கு, உடுமலை சுற்றுப்பகுதிகளில் விளையும், தக்காளி, தேங்காய், வெங்காயம், முருங்கை, கத்தரி, வெண்டை என, தினமும், 700 டன் வரை காய்கறிகள் வரத்து உள்ளது.

உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலம் மறையூர், மூணாறு பகுதிகளிலிருந்தும் வியாபாரிகள் வந்து, காய்கறிகளை கொள்முதல் செய்கின்றனர்.

தினசரி சந்தையில், அமைக்கப்படும் கடைகளுக்கு, காய்கறி வாங்க, பல ஆயிரக்கணக்கான பொதுமக்களும் வந்து செல்கின்றனர்.

தரைக்கடைகளில் அமர்ந்து, வியாபாரிகள் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில், பழைய கடைகளை அகற்றி விட்டு, நகராட்சி நுாற்றாண்டு விழா சிறப்பு நிதியின் கீழ், 6.84 கோடி ரூபாய் மதிப்பில், புதிதாக, 70 கடைகள் கட்ட, 4 ஆண்டுக்கு முன் நிதி ஒதுக்கப்பட்டது.

கட்டுமான பணிகள் துவங்கி, ஆண்டுக்கணக்கில் நடந்து வருகிறது. ஒரு பகுதியில் மட்டும் கடைகள் கட்டப்பட்ட நிலையில், முழுமையாக பணி முடிக்காததால், கடைகள் வீணாகி வருகிறது.

மது அருந்தும் மையமாகவும், சமூக விரோத செயல்கள் நடக்கும் மையமாக மாறியுள்ளது. ஏற்கனவே, ஆடு வதைக்கூடம், இரண்டு நுண் உரக்குடில்கள் என பல்வேறு காரணங்களில், சந்தை வளாகம் குறுகியுள்ள நிலையில், கடைகள் கட்டும் பணியும் முழுமையாக நிறைவு செய்யாததால், நெரிசல் நிலவுகிறது.

வாகனங்கள் நிறுத்த முடியாமலும், கடைகள் அமைக்க முடியாமலும், சந்தை வளாகத்தில் நெரிசல் அதிகரித்துள்ளது. விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் கடுமையாக பாதித்து வருகின்றனர்.

விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகளை, இறக்கி வைத்து விற்பனை செய்ய முடியாமலும், வாகனங்கள் உள்ளே வர முடியாத நிலை என போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்படுகிறது.

தற்போது, சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ள நிலையில், தக்காளி கொண்டு வரும் வாகனங்கள், கொள்முதல் செய்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் லாரிகள் என நுாற்றுக்கணக்கான வாகனங்கள் வருகின்றன.

இதனால், ராஜேந்திரா ரோடு, பழநி ரோடு, பஸ் ஸ்டாண்ட், ரவுண்டானா பகுதிகளில், வாகனங்கள் செல்ல முடியாத நிலையில், நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

எனவே, சந்தை வளாகத்தில் கடைகள் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்கவும், வாகனங்கள் நிறுத்துவதற்கு உரிய இடங்களை ஒதுக்கீடு செய்யவும் வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us