ADDED : பிப் 25, 2024 12:10 AM

அவிநாசி:அவிநாசி ஒன்றியம், தேவராயன்பாளையம் ஸ்ரீ காமாட்சியம்மன் கோவிலில் நுாற்றாண்டு மாசி மக தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
முன்னதாக கடந்த 18ம் தேதி தேர் திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டுதல், கொடியேற்றம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.
சுவாமி திருவீதி உலா வருதல், அபிஷேக ஆராதனை, திருவிளக்கு பூஜை, தீர்த்தக்காவடி, படைக்கலம் எடுத்தல் ஆகியவை நடந்தன.
நேற்று விநாயகருக்கு 108 குடம் அபிஷேகம், பொங்கல் வைத்தல், கோ பூஜையை தொடர்ந்து ஸ்ரீ காமாட்சி அம்மன் தேருக்கு எழுந்தருளி, அவிநாசி திருப்புக் கொளியூர் ஆதீனம் வாகீசர் மடாலயம் காமாட்சி தாச சுவாமிகள் தலைமையில், தி சென்னை சில்க்ஸ் குழுமம் பரஞ்சோதி முன்னிலையில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இன்று, வண்டித்தாரை, பரிவேட்டை, நாளை தரிசனம், மஞ்சள் நீராட்டு, 27ம் தேதி ஸ்ரீ முத்துக்குமார சுவாமிக்கு பொங்கல் வைத்தல் ஆகிய நிகழ்ச்சிகளுடன் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் நுாற்றாண்டு மாசி மக தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.