/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை
கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை
கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை
கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை
ADDED : ஜூலை 04, 2025 12:53 AM

பல்லடம்; கறிக்கோழி வளர்ப்பு கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர்கள், பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு கமிட்டி (பி.சி.சி, ) அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். போலீசார், இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர்கள் கூறியதாவது:
கடந்த, 2022ல், கோவையில் நடந்த பேச்சுவார்த்தையின்படி, கோழி வளர்ப்பு தொகை, 6.50 ரூபாய் வழங்குவது, கோடை கால போனஸ், ரேட் போனஸ் வழங்குவது, பண்ணையாளர்களுக்கு காப்பீடு செய்து தருவது என்று முடிவு செய்யப்பட்டது. இதில் மாற்றங்கள் இருப்பின், ஆறு மாதத்தில் மீண்டும் கூட்டம் நடத்தி, தீர்வு காணலாம் எனவும் முடிவானது.
நான்கு ஆண்டுகள் ஆகியும், ஒப்பந்தப்படி, நிறுவனங்கள் வழங்க வேண்டிய கோடை கால போனஸ், ரேட் போனஸ் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக நிறுவனங்களை பலமுறை தொடர்பு கொண்டும் பயனில்லை. எங்களது கோரிக்கைகளை நிறுவனங்கள் கண்டுகொள்ளாமல் உள்ளன.
கடந்த மூன்று ஆண்டில், மின் கட்டணம், வேலை ஆட்கள் சம்பளம், தேங்காய் நார் பித்து என, அனைத்தும் உயர்ந்துள்ளன.
ஆனால், கோழி வளர்ப்பவர்களின் அடிப்படை வளர்ப்பு தொகை மட்டும் உயராதது வேதனை அளிக்கிறது. வங்கியில் கடன் பெற்ற கறிக்கோழி பண்ணையாளர்கள், கடனுக்கான வட்டியை கூட செலுத்த முடியாத சூழலில் உள்ளனர். எனவே, நிலுவையில் உள்ள தொகையை வரும் தீபாவளிக்கு போனஸாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
கறிக்கோழி உற்பத்தி நிறுவன உரிமையாளர்கள் கூறுகையில், 'பி.சி.சி., வாயிலாக கூலி உயர்வு, போனஸ் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்த முடியாது. மாறாக, அந்தந்த கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களும், அவர்களிடம் கோழிகள் வாங்கி வளர்க்கும் பண்ணையாளர்களுமே சுமூக பேச்சு நடத்தி கூலி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். சங்கம் இது போன்ற பிரச்னைகளில் தலையிடாது,' என்றனர்.
இன்ஸ்பெக்டர் மாதையன் கூறுகையில், ''இருதரப்பினரும் தங்களின் கருத்துகளை முன்வைத்துள்ளீர்கள். இதில், சட்ட ரீதியாக நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. கூலி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண, அரசிடம் முறையிட வேண்டும். இல்லாவிட்டால், கோர்ட் வாயிலாக தான் இதற்கு தீர்வு காண முடியும்'' என்றார்.
இதனை தொடர்ந்து, ஆலோசித்து முடிவு எடுப்பதாக கூறி அனைவரும் கலைந்து சென்றனர்.