/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பட்டா இழுத்தடிப்பு: பட்டுக்கோட்டையார் நகர் மக்கள் போராட்டம்பட்டா இழுத்தடிப்பு: பட்டுக்கோட்டையார் நகர் மக்கள் போராட்டம்
பட்டா இழுத்தடிப்பு: பட்டுக்கோட்டையார் நகர் மக்கள் போராட்டம்
பட்டா இழுத்தடிப்பு: பட்டுக்கோட்டையார் நகர் மக்கள் போராட்டம்
பட்டா இழுத்தடிப்பு: பட்டுக்கோட்டையார் நகர் மக்கள் போராட்டம்
ADDED : பிப் 06, 2024 01:31 AM

திருப்பூர்;வீட்டு மனை பட்டா கேட்டு, பட்டுக்கோட்டையார் நகர் பகுதி மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று போராட்டம் நடத்தினர்.
திருப்பூர், பட்டுக்கோட்டையார் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர், கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்ட அரங்கம் முன், தரையில் அமர்ந்து, கோஷங்கள் எழுப்பினர்.
குடியிருப்போர் நலச்சங்க தலைவர் சேகர் கூறியதாவது: திருப்பூர் மாநகராட்சி, 55வது வார்டு, பட்டுக்கோட்டையார் நகர் வடக்கு பகுதியில், 200 குடும்பங்கள், கடந்த 36 ஆண்டுகளாக வீடுகட்டி குடியிருந்து வருகிறோம். நில உச்சவரம்பு சட்டத்தில் எடுக்கப்பட்ட அந்த இடம், தனியாருக்கு விவசாயம் செய்ய வழங்கப்பட்டது.
அவர் விதிமீறி, நிலத்தை விற்பனை செய்ததால், 3.18 ஏக்கருக்கான பட்டாவை அரசு ரத்து செய்தது. இதனால், பூம்புகார் மற்றும் பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், அந்த இடத்தில் வீடுகட்டி குடியேறினர். ஐந்து பேர் மட்டும் விவசாயிகள் என தகவல்கொடுத்து, தலா 63 சென்ட் இடத்துக்கு பட்டா பெற்றனர்.
கடந்த, 1999ல், ஐந்து நபர்களுக்கு வழங்கிய பட்டாவை ரத்து செய்து, குடியிருப்போருக்கு பட்டா வழங்க அரசு உத்தரவிட்டது. அப்போதிருந்த அதிகாரிகள், பட்டாவை ரத்து செய்யாமலேயே, 72 பேருக்கு பட்டா வழங்கி விட்டனர்.
ஐந்து பேர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். குடியிருப்போர் நலச்சங்கமும், அரசும் இணைந்து, வழக்குகள் அனைத்தும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்ட ஐந்து பேரும், பட்டா வழங்க ஆட்சேபனை இல்லை என, கடிதம் கொடுத்துள்ளனர். ஆனாலும், பட்டா வழங்காமல் இழுத்தடிக்கின்றனர். இப்பிரச்னைக்கு எத்தனை நாட்களில் தீர்வு காணப்படும் என, கலெக்டர் தெரிவிக்கும்வரை, போராட்டத்தை தொடர்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து, 'அடுத்த மூன்று வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்,' என கலெக்டர் கிறிஸ்துராஜ் உறுதி அளித்ததால், போராட்டத்தை கைவிட்டு, மக்கள் கலைந்து சென்றனர்.